வன்னியர் இளைஞர் மாநாடு: ராமதாஸ்-அன்புமணி குறித்த கேள்வி! செய்தியாளரிடம் சீரிய திலகபாமா! நடந்தது என்ன?
பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் விமர்சனம் செய்து அறிக்கை விட்டது குறித்த கேள்விக்கு, ”என்னை விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு கூட உரிமை உள்ளது. பேசுங்கள் நான் கேட்கிறேன்” என பதிலளித்தார்.

பாமக உட்கட்சி பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்க வேண்டாம் என பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்து உள்ளார்.
திலகபாமா பேட்டி
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உட்கட்சி பிரச்சனைகள் குறித்து எழுந்த கேள்விகளுக்கு கட்சியின் பொருளாளர் திலகபாமா தனது பேட்டியில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சித்திரை திருநாள் மாநாடு மற்றும் இளைஞர் பெருவிழாவை முன்னிட்டு கட்சி தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், தனிமனித விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்புவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
சித்திரை இளைஞர் மாநாட்டு
திலகபாமா தனது பேட்டியில், "பாமக தற்போது சித்திரை திருநாள் மாநாட்டை திறம்பட நடத்துவதற்கு அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு இளைஞர்களும், பெண்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்," என்று தெரிவித்தார்.
ராமதாஸ்-அன்புமணி குறித்த கேள்வி
ராமதாஸ்-அன்புமணி ஆகியோர் சமாதானம் ஆகி இருவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்களா என்ற கேள்விக்கு, "உங்களுக்கு என்ன பிரச்னை?, மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி என்ன?, பாமக அரசியல் களத்தில் எந்த இடத்தில் வேலை செய்துகொண்டு இருக்கிறது என்பது குறித்து பேச யாரும் தயாராக இல்லை. ஏன் தனிமனித விஷயங்களை கேள்வி கேட்காதீர்கள். மக்கள் விரோத நடவடிக்கைகளை விமர்சிக்க வேண்டும் என்றார்.
வடிவேல் ராவணன் அறிக்கைக்கு பதில்
பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் விமர்சனம் செய்து அறிக்கை விட்டது குறித்த கேள்விக்கு, ”என்னை விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு கூட உரிமை உள்ளது. பேசுங்கள் நான் கேட்கிறேன்” என பதிலளித்தார். மேலும் "சித்திரை திருநாள் இளைஞர் பெருவிழாவை கொண்டாட நாங்கள் காத்திருக்கிறோம்," என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.
திலகபாமா பேசியது என்ன?
பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், பாமகவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக பாமக பொருளாளர் திலகபாமா கருத்து தெரிவித்து இருந்தார். திலகபாமாவின் கருத்து மருத்துவர் ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
வடிவேல் ராவணன் கண்டன அறிக்கை
இந்த நிலையில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், “திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பா.ம.க.வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர். திலகபாமா பாட்டாளி மக்களின் தோழர் அல்லர். மேட்டுக்குடியினம். பெண்களுக்குத் தலைமையில், அதுவும் பொருளாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அய்யாவின் பரிந்துரையிலும், ஆதரவிலும் பதவி பெற்றவர். பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பாடுபட்டு வந்த பாட்டாளி சொந்தங்களை விரட்டி அடித்தவர். உடனிருந்தே கொள்ளும் நோய் இவர். அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி. தமிழகத்திலேயே – ஏன், இந்தியாவிலேயே ஜனநாயகப் பண்புள்ள ஒரே கட்சி பா.ம.க. ஜனநாயக மரபுகளையும், சமூக நீதிக் கோட்பாட்டினையும் கட்சிக்குள்ளே பேணிக் காத்து வரும் ஒரே தலைவர் வழிகாட்டி மருத்துவர் அய்யா அவர்கள். அரசியல் கட்சிகள் கடந்து அனைவராலும் பாராட்டப்பெறும் ஒரே தலைவர். அவர் விடுக்கும் அறிக்கைகளே அனைவருக்கும் அரசியல் அகரமுதலி” என குற்றம்சாட்டி இருந்தார்.
அன்புமணி உடன் சந்திப்பு
இந்த நிலையில் பாமக பொருளாளர் திலகபாமா மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகிய இருவரையும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகின.
