’பாமக தலைவர் ஆன உடனேயே என் நிம்மதியை இழந்துவிட்டேன்’ அன்புமணி ராமதாஸ் வேதனை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’பாமக தலைவர் ஆன உடனேயே என் நிம்மதியை இழந்துவிட்டேன்’ அன்புமணி ராமதாஸ் வேதனை!

’பாமக தலைவர் ஆன உடனேயே என் நிம்மதியை இழந்துவிட்டேன்’ அன்புமணி ராமதாஸ் வேதனை!

Kathiravan V HT Tamil
Published Jun 20, 2025 08:28 AM IST

”ஒரு காலத்தில் சுதந்திரமாகச் செயல்பட்ட தான், தலைவர் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்தே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்தச் சுமையை தான் கடந்து வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்”

’பாமக தலைவர் ஆன உடனேயே என் நிம்மதியை இழந்துவிட்டேன்’ அன்புமணி ராமதாஸ் வேதனை!
’பாமக தலைவர் ஆன உடனேயே என் நிம்மதியை இழந்துவிட்டேன்’ அன்புமணி ராமதாஸ் வேதனை!

தர்மபுரியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசியுள்ளார். பா.ம.க. தலைவர் பதவியை ஏற்றதிலிருந்து தனது மனநிம்மதி போய்விட்டதாகக் குறிப்பிட்ட அவர்,தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் 100 விழுக்காடு பொய்யானவை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

மன உளைச்சலும் பொறுப்பின் சுமையும்

அன்புமணி ராமதாஸ் தனது பேச்சில், "சமீப கடந்த ஒரு இரண்டு மாதங்களாக எனக்கு மிகுந்த மன உளைச்சல், உங்களுக்கெல்லாம் தெரியும். இன்னும் சொல்லப்போனால் என்னைக்கு நான் தலைவர் பொறுப்பை ஏற்றோனோ, அன்று முதல் எனக்கு மனநிம்மதி போய்விட்டது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். ஒரு காலத்தில் சுதந்திரமாகச் செயல்பட்ட தான், தலைவர் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்தே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்தச் சுமையை தான் கடந்து வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தரும் உத்வேகம்

இருப்பினும், ஒவ்வொரு முறையும் மாவட்டங்களுக்குச் சென்று மக்களை, அதாவது "என் தம்பிகள், என் தங்கைகள், அண்ணன்மார்கள், தாய்மார்கள்" ஆகியோரைச் சந்திக்கும் நேரத்திலே, அவர்கள் தனக்குக் கொடுக்கின்ற உற்சாகம் தன்னை மேலும் மேலும் உறுதிப்படுத்தி, இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று ஊக்குவிப்பதாகவும், நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் கூறினார். தன்னைப் போன்று கோடான கோடி சொந்தங்கள் இருக்கின்றார்கள் என்பதும், அதுவே தன்னை அடுத்த கட்டத்துக்குச் செல்ல வைப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அமைதியும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பும்

கடந்த இரண்டு மாத காலத்தில் ஏற்பட்ட பல குழப்பமான சூழல்களுக்கு மத்தியிலும், தான் அமைதியான முறையிலே தனது பணிகளைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தன் மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகள் வந்தபோதும் இதுவரை தான் ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்து வருவதாகவும், இதற்கு "நம் கட்சி, நம் சமுதாயத்தை கருதி நான் அமைதியாக இருக்கின்றேன்" என்பதே காரணம் என்றும் விளக்கமளித்தார். கட்சி மற்றும் சமுதாயத்தின் நலனே தனக்கு முக்கியம் என்பதை வலியுறுத்திய அவர், தன் மீது சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளும் "100 விழுக்காடு பொய்யானவை" என்றும், அது மக்களுக்கும், மேடையில் இருப்பவர்களுக்கும் நிச்சயமாகத் தெரியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.