Anbumani vs Mini Bus: சென்னைக்கு வரும் தனியார் மினி பஸ் சேவை.. எதிர்க்கும் அன்புமணி ராமதாஸ்.. காரணம் என்ன?
Anbumani vs Mini Bus: சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மினி பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதியா? எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Anbumani vs Mini Bus: சென்னை புறநகர் பகுதிகளில் வரும் பிப்ரவரி முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் தனியார் மினி பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் இல்லாத வகையில் சென்னையில் தனியார் மினி பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னையில் பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 ஆக உயர்த்த வேண்டும்; அவற்றில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதன் மூலம் பொதுப்போக்குவத்துப் பயன்பாட்டை அதிகரித்து, சென்னையில் மகிழுந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அதன் வாயிலாக போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். இதை நோக்கி அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது வரவேற்கத்தக்கதாகும்.