’வன்னியரை வைத்தே வன்னியருக்கு ஸ்கெட்சா? குனிந்த முதுகு நிமிர்ந்தால் மந்திரி பதவி காலி!’ சிவசங்கருக்கு பாமக கண்டனம்!
ஒரு வன்னியரை வைத்தே அவர்களை இழிவுபடுத்துவதும், திமுகவை பட்டியலினத்து தலைவர்கள் எவரேனும் விமர்சித்தால் அவர்களை பட்டியலினத்தவரை வைத்தே இழிவுபடுத்துவதும் கலைஞர் காலத்திலிருந்தே திமுகவின் வாடிக்கை என ஜி.கே.மணி அறிக்கை

அறிவாலயத்தில் சுயமரியாதையை அடகு வைத்த அடியாள் சிவசங்கருக்கு சமூகநீதி பற்றி என்ன தெரியும்? வரலாற்றை படிக்க வேண்டும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்து உள்ளார்.
அறிவாலய அடியாளை ஏவி விட்டு…!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்களுக்கு மேலாகியும் அதை செயல்படுத்த போலி சமூகநீதி திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் தமிழகத்தைத் தொடர்ந்து கொள்ளையடிக்கலாம் என்ற திமுகவின் கனவை கலைத்திருக்கிறது. அதனால் தான் அறிவாலய அடியாளை ஏவி விட்டு, சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிராகவும், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு எதிராகவும் ஓசையெழுப்ப வைத்திருக்கிறார்கள்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் எழுப்பிய வினாக்கள் மிகவும் தெளிவானவை. உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1000 நாட்களுக்கு மேலாகியும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றாதது ஏன்? திமுகவில் துரைமுருகன் போன்ற வன்னிய சமூதாயத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சருக்கும் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது ஏன்? என்பது தான் அவை.