சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும்? - ராமதாஸ் கேள்வி
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம், இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை எவ்வளவு? என்பது தெரியவரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சாதிவாரு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும் என்பதற்காக கால அட்டவணையை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், "இந்திய மக்களுக்கு முழுமையான சமூகநீதியை வழங்கும் வகையில், நாடு முழுவதும் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த தங்கள் தலைமையிலான அரசு ஆணையிட்டிருப்பது தான் இதற்கு காரணம். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கப் பட்டதன் நோக்கங்களில் முதன்மையானது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பு 1980&ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தை நான் தொடங்கிய போது, தொடக்கவிழாவில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான். அப்போது முதல் கடந்த 45 ஆண்டுகளாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் இயக்கங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் பா.ம.க. தான் நினைவுக்கு வரும் என்று கூறும் அளவுக்கு அதற்காக பாமக போராடியிருக்கிறது.