‘முடிந்துபோனதை பற்றி பேச வேண்டாம்’ பாமக நிறுவனர் ராமதாஸ் பகீர் பேட்டி!
”அன்புமணி ராமதாஸுடனான சமீபத்திய சந்திப்பு குறித்த கேள்விகளுக்கு, "பின்னர் பதிலளிக்கிறேன்" என்று கூறி, மேலும் விவரங்கள் அளிக்காமல் தவிர்த்தார்”

எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பாமகவில் நிலவி வரும் உட்கட்சி குழப்பங்கள் மற்றும் கூட்டணி முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு என்று உறுதியாகக் கூறினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடையே நிலவும் குழப்பங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ராமதாஸ், கடந்த 2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் பாஜகவுடன் இணைந்தது கட்சிக்கு உள்ளே பிரச்சனைகளை ஏற்படுத்தியதாகக் கருதப்படுவது குறித்து பேசும்போது, "முடிந்து போன விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம், இனி நடக்கப் போவதைப் பற்றி பேசுவோம்" என்று தெரிவித்தார். மேலும், கட்சித் தலைவர் பொறுப்பு மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பதவிகள் குறித்த கேள்விகளுக்கு, "பேசி முடிவு செய்வோம்" என்று கூறி, விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.