தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்! பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
”மத்திய அரசின் அறிவிப்பு மூலம் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வந்த மகிழ்ச்சி மறைந்து மக்களிடம் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது”

தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு விளக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
தேசிய அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027&ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சமூகநீதியைக் காக்கவும், தொகுதி மறுசீரமைப்பு குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டவும் 2025&ஆம் ஆண்டு இறுதிக்குள்ளாக சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தென்னாட்டு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் கடந்த ஏப்ரல் 30&ஆம் நாள் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாக நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்ட போது, இரு காரணங்களுக்காக சமூகநீதி ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகைக்கு இணையாக இடஒதுக்கீடு செய்யப்படும்; 2025&ஆம் ஆண்டிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன்பின் 2035&ஆம் ஆண்டில் அடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வரை மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுசீரமைக்கப்படாது& அதனால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கைக் குறையாது ஆகியவை தான் அந்த இரு காரணங்களாகும். ஆனால், மத்திய அரசின் அறிவிப்பு மூலம் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வந்த மகிழ்ச்சி மறைந்து மக்களிடம் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.