’என்னை போன்றவர்கள் இங்கே அமர காரணம் பெரியார்தான்’ பேரவையில் தனபால் உருக்கம்!
வைக்கம் போராட்டத்தை நடத்தி தாழ்த்தப்பட மக்களுக்கெல்லாம் முன்னேற்றத்தை கொண்டு வர பெரியார் பாடுபட்டார் - முன்னாள் சபாநாயகர் தனபால்
1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்க கோரி பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் நூற்றாண்டை எட்டிய நிலையில் இதனை நினைவுக்கூறும் வகையில் தமிழ்நாடு சட்டபேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் வைக்கம் போராட்டம் குறித்து பேசி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கி ஓராண்டு முழுவதும் நடத்தப்படும். வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயனோடு நானும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறேன்.
வைக்கம் போராட்டம் நடந்த இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம். தமிழ்நாட்டில் முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் என்ற தமிழ்நூலின் மலையாள மொழிப்பெயர்ப்பு வெளியிடப்படுகிறது. இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கில பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடத்தப்படும்.
பெரியாரை நினைவுகூறும் வகையில் பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபட்டு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வைக்கம் விருது செப்டம்பர் 17அன்று வழங்கப்படும்
கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை மறுசீரமைக்க 8 கோடியே 14 லட்சம் ஒதுக்கப்படும். பெரியார் சிறைவைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் நினைவிடம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். வைக்கம் போராட்டத்தை நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் அடங்கும்.
முதலமைச்சரின் 110 விதியின் கீழ் வெளியான இந்த அறிவிப்பை வரவேற்று பல்வேறு கட்சி சார்பில் எம்.எல்.ஏக்கள் பேசினார். அதிமுக சார்பில் வரவேற்று பேசிய முன்னாள் சபாநயாகரும் அதிமுக எம்.எல்.ஏவுமான தனபால் உருக்கமாக பேசினார். அதில் இன்றைக்கு ஓர் நல்ல அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்கள்.
என்னை போன்றவர்கள் எல்லாம் கூட இந்த மன்றத்திலே அமர்வதற்கு உறுதுணையாக இருந்தவர் தந்தை பெரியார்.
வைக்கம் போராட்டத்தை நடத்தி தாழ்த்தப்பட மக்களுக்கெல்லாம் முன்னேற்றத்தை கொண்டு வர பாடுபட்டார்கள், தந்தை பெரியாருக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நூற்றாண்டு விழா நடத்தியதை எண்ணிப்பார்த்து இந்த அறிவிப்பை அதிமுக சார்பில் வரவேற்று அமர்கிறேன்.