Kodaikanal: மலர் கண்காட்சிக்கு வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் - வியப்படைந்த சுற்றுலாப் பயணிகள்
கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கு வருகை புரிந்த மாற்றுத்திறனாளிகள் மலர்களைத் தொட்டும், வாசனை மூலம் உணர்ந்தும் ரசித்தனர்.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானல், மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இந்த சுற்றுலா பகுதிக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
ட்ரெண்டிங் செய்திகள்
குறிப்பாகக் கோடைக் காலத்தில் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். கோடை விழாவான அறுபதாவது மலர் கண்காட்சி கடந்த 26 ஆம் தேதி அன்று கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது.
இதனைக் காண்பதற்கான ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்த கண்காட்சியில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட உருவங்களையும், மலர்களையும் பார்த்து மக்கள் ரசித்தனர்.
இந்நிலையில் முதன் முறையாக இந்த மலைக் காட்சியை ரசிப்பதற்காகப் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வந்தது அனைவரிடத்திலும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.
அரசு பேருந்துகளில் வழக்கமாகக் கொடுக்கப்படும் சலுகைகளைப் பயன்படுத்தி 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இங்கு இருக்கக்கூடிய அனைத்து சுற்றுலா தளங்களையும் அவர்கள் பார்க்க விரும்பியுள்ளனர்.
குறிப்பாகக் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பாக 150 ரூபாய்க்குச் சுற்றிப் பார்க்கலாம் என்ற சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்தி 150 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து கொடைக்கானல் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் அரசு பேருந்து மூலம் கண்டு களிக்கலாம். இதன் மூலம் மாற்றுத்திறனாளி சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவிற்கு மலர் கண்காட்சியைக் காண்பதற்கு வந்துள்ளனர்.
உதவியாளர்களுடன் மாற்றுத்திறனாளிகள் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த மலர்களைத் தொட்டும், அதன் வாசனைகளை உணர்ந்தும் மலர் கண்காட்சியை ரசித்தனர். மலர்களாலும், காய்கறிகளாலும் அங்கு உருவாக்கப்பட்டிருந்த தத்ரூபமான உருவங்களைத் தொட்டு உணர்ந்து மாற்றுத்திறனாளிகள் அதனைக் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் அங்கு வந்திருந்த அனைத்து சுற்றுலா பகுதிகளுக்கும் வியப்பை ஏற்படுத்தியது. மற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என மாற்றுத்திறனாளி பயணிகள் இந்த பயணத்தின் மூலம் சுட்டிக்காட்டி உள்ளனர்.
மேலும் இந்த பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சியைக் காண வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அனுமதி வழங்கி, இனிப்புகள் கொடுத்து அலுவலர்கள் வரவேற்றனர். இதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்த மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் மாற்றுத்திறனாளி பயணிகள் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
டாபிக்ஸ்