சாத்தனூர் அணையில் இருந்து முதலைகள் எஸ்கேப்! விழுப்புரம், கடலூர் மக்கள் அச்சம்!
சாத்தனூர் அணையில் இருந்து முதலைகள் வெளியேறி நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளது குறித்த செய்தியை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பெண்ணையாற்றை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கையாக விடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்துனூர் அணை மற்றும் முதலை பண்ணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்பெண்ணை ஆறு
கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பயணித்து கடலில் கலக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனூர் அணை கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய முதலை பண்ணையும் உள்ளது. அணை பகுதியிலும் ஏராளமான முதலைகள் உள்ளன. கோடைக்காலங்களில் அணையில் இருந்து வெளியேறும் முதலைகள், கரைகளில் இரை தேடுவதை வழக்கமாக கொண்டு இருந்தன. இது போன்ற நேரங்களில் உள்ளூர் மீனவர்களுக்கு பாதிப்புகள் இருந்தது.
வெள்ளத்தில் எஸ்கேப் ஆன முதலைகள்
ஆனால் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தென்பெண்ணை படுகையில் பெய்த கனமழையால் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 54 ஆயிரம் கன டி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தென் பெண்ணை ஆற்றில் 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேறி கடலுக்கு சென்றது. அப்போது சாத்தனூர் அணை மற்றும் அதன் அருகே உள்ள பண்ணையில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் வெள்ளத்தில் வெளியேறி உள்ளன.
இவை, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளன. மேலும் சில முதலைகள் முகத்துவாரம் வழியாக கடலுக்கும் சென்று உள்ளன. தற்போது வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்த முதலைகள் வெளியே தலைக்காட்டி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 2 முதலைகள் பிடிபட்டு உள்ளன.
மக்கள் அச்சம்
சாத்தனூர் அணையில் இருந்து முதலைகள் வெளியேறி நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளது குறித்த செய்தியை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பெண்ணையாற்றை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கையாக விடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.