கோவை விவசாயிகளுக்கு அபராதமா? சட்டமன்றத்தில் சூடான விவாதத்தை கிளப்பிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி!
மணல் கடத்தல்காரர்களுக்கு அபராதம் விதிக்காமல், விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், எஸ்.பி.வேலுமணி சட்டமன்றத்தில் பேசினார்.

கோவையில் விசாரணை என்ற பெயரில் அழைக்கப்பட்ட விவசாயிகளுக்கு அபராதம் விதித்ததற்கு அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார்.
பட்டா நிலம் மற்றும் அரசு நிலங்களில் அனுமதியின்றி மண் எடுப்பதை கண்டறிய, சிறப்பு தனிக்குழுக்கு நியமனம் செய்ய உத்தரவிட்டது என்றும், சிறப்பு தனிக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கோவை புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் சார்பாக, மேற்கண்ட குற்றச் செயலுக்காக தமிழ்நாடு சிறுகனிம விதிகள் 1999ல் விதி 36ன் படி, மணல் கடத்தல்காரர்களுக்கு அபராதம் விதிக்காமல், விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், எஸ்.பி.வேலுமணி சட்டமன்றத்தில் பேசினார்.
அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கோவையில 16 வழித்தடங்களில் இயங்கும் செங்கல் சூளைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசின் அனுமதியில்லாமல் மணல் எடுப்பவர்களின் விபரங்களை நீதிமன்றம் கேட்டதாகவும், அது தொடர்பான விசாரணையில் கோவை போரூர், இக்கறை, ஆலந்தூர், வெள்ளிமலை பகுதியில் உள்ள அரசு நிலங்களில் அதிக அளவில் 5 மீட்டர் வரை மணல் அள்ளப்பட்டிருந்ததாகவும், செங்கல் சூளைகளுக்கு அதிக அளவில் மணல் வெட்டப்பட்டிருந்ததாகவும்,
அந்த அடிப்படையில் நீதிமன்றத்தின் உத்தரவிட் பேரில் கனிமவளத்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அரசு நிலத்தில் கள்ளத்தனமாக மணல் எடுத்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி எழுப்பிய இந்த விவாதத்தால், சட்டமன்றத்தின் இன்றைய துவக்க நாளே, சூடாக காணப்பட்டது.
