‘எங்க அப்பத்தா சொல்லுச்சு.. திமுகவுக்கு புகழாரம்..’ ஓபிஎஸ் பேச்சுக்கு மேஜையை தட்டி திமுகவினர் வரவேற்பு!
அதுமட்டுமல்லாமல் மூன்று கலைக் கல்லூரிகளை முன்னாள் முதல்வர் கலைஞர் தான், பின்தங்கிய சமுதாய் மக்களுக்காக ஏற்பாடு செய்து தந்தார் என்பதையும் தெரிவிக்கிறேன்.

இன்றைய சட்டமன்றத்தில், மறைந்த பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அது தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தன்னுடைய கருத்தில், திமுகவுக்கும், திமுக தலைவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இது அதிமுகவினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக ஓபிஎஸ் பேசியது இதோ:
நானும் அவரும் பெரியகுளத்தில் ஜெயித்தோம்
‘‘பேரவை தலைவர் அவர்களே, முதலமைச்சர் அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை, இன்று வெளியிட்டிருக்கிறார்கள். 1952 ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அவர் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார் என்பதை நினைவு கூறுகிறேன். நானும் என் அரசியல் வாழ்க்கையில் பெரியகுளத்தில் சட்டமன்ற உறுப்பினராக தான் தேர்வு செய்யப்பட்டேன் என்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
தேவர் அய்யா அவர்களுக்கு உசிலம்பட்டியின் மையப்பகுதியில் சிலை அமைக்கப்பட்டிருந்தது. தேவர் அய்யாவின் உடன்பிறந்த சகோதரராக பி.கே.மூக்கையாத்தேவர் விளங்கி, அனைத்து நிலைகளிலும் அவருக்கு ஆதரவாக இருந்தவர். அந்த நிலையை நான் எண்ணிப் பார்த்து தான், நான் உசிலம்பட்டியில், அவருக்கு சிலை வைக்க நான் ஏற்பாடு செய்தேன்.
மூன்று கல்லூரிகளை தந்தவர் கலைஞர்
அதுமட்டுமல்லாமல் மூன்று கலைக் கல்லூரிகளை முன்னாள் முதல்வர் கலைஞர் தான், பின்தங்கிய சமுதாய மக்களுக்காக ஏற்பாடு செய்து தந்தார் என்பதையும் தெரிவிக்கிறேன்(திமுகவினர் மேஜையை தட்டி வரவேற்பு). மேஜையை தட்டும் சத்தத்திற்கு இடையே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ‘20 சதவீதம் இடஒதுக்கீடு..’ என்று கூறிவிட்டு, முதலமைச்சரையும், திமுகவினரையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தார்.
எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும்
எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும், ‘தேவர் இமை மூடாதுப்பா..’ என்று, அதற்கு நான் விளக்கம் கேட்பேன். அப்பத்தா என்பது, தந்தை வழி பாட்டியை தான், நாங்கள் அப்பத்தா என்று அழைப்போம். அப்படி நான் கேட்கும் போது, என் அப்பத்தா சொல்லும், ‘நாட்டை காப்பதற்கு, இமை மூடாமல் காப்பார்கள்,’ என்று அதற்கு பொருள் என்று கூறுவார். அந்த அடிப்படையில் தான், தேவர் இமை மூடாது என்பதை என் அப்பத்தா சொல்லி கேட்டிருக்கிறேன்.
முகம் மாறிய செங்கோட்டையன்
சிறப்பு வாய்ந்த மூக்கையாத் தேவர் அவர்களுக்கு சிலையோடு கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும், முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன்,’’ என்று ஓ.பன்னீர்செல்வம் பேசி அமர்ந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை ஓபிஎஸ் கூறிய போது, அதுவரை எதிர்திசையை பார்த்து அமர்ந்திருந்த செங்கோட்டையன், உடனே ஓபிஸ்.,யை நோக்கி முறைத்த முகத்தோடு பார்த்தார். மற்ற அதிமுகவினரும், ஓபிஎஸ் பேச்சை ரசிக்கவில்லை என்பது, அவர்களின் முகத்தை பார்க்கும் போது தெரிந்தது. அதே நேரத்தில் எதிர் திசையில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின், சிரித்த முகத்தோடு ஓபிஎஸ் பேச்சை ரசித்தார்.
