கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ‘ஓராண்டு நிறைவு!’ திமுகவை சாடும் அதிமுக!
”2026-ல் கள்ளச்சாராய திமுக மாடல் ஆட்சி வீழ்ந்து, அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும்- இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி மட்டுமல்ல, மரணித்த 67 உயிர்களுக்குமான நீதியும் அதுவே!”

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்ததன் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி “கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி!” என அதிமுக எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த இடுகையில், கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு! 67 உயிர்கள் மரணித்தது கள்ளச்சாராயத்தால் மட்டும் அல்ல. தன் நிர்வாகத் திறமின்மையை மறைக்க பச்சைப்பொய் சொன்ன இந்த ஸ்டாலின் அரசின் கள்ளத்தனத்தாலும் தான்!
மரக்காணம் மரணங்களின் போதே திருந்தாத திமுக அரசின் அலட்சியம், கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களைக் காவு வாங்கியது! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயப் புழக்கம் இருப்பதை எதிர்க்கட்சி அதிமுக எச்சரிக்கை விடுத்தோமே- அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கிடப்பில் போட்டதால் வந்த உயிரிழப்புகள் தானே இவை? CBI விசாரணை வேண்டும் என்ற அதிமுக கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரை சென்றீர்களே- நீதிக்கே எதிரான ஆட்சி என்பதற்கு, இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்?