’நாங்களும் NDA-வுலதான் இருக்கோம்! நாங்க இல்லனா அதிமுக ஜெயிக்காது!’ ஓபிஎஸ் ஓபன் டாக்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’நாங்களும் Nda-வுலதான் இருக்கோம்! நாங்க இல்லனா அதிமுக ஜெயிக்காது!’ ஓபிஎஸ் ஓபன் டாக்!

’நாங்களும் NDA-வுலதான் இருக்கோம்! நாங்க இல்லனா அதிமுக ஜெயிக்காது!’ ஓபிஎஸ் ஓபன் டாக்!

Kathiravan V HT Tamil
Published May 15, 2025 05:46 PM IST

“என்.டி.ஏ கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதாகக் கூறப்படுவது பற்றிய கேள்விக்கு, என்.டி.ஏ கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும், மத்திய அமைச்சர் அமித் ஷா இங்கு வந்திருந்தபோது ஒன்பது கட்சிகளும் சேர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டார்”

’நாங்களும் NDA-வுலதான் இருக்கோம்! நாங்க இல்லனா அதிமுக ஜெயிக்காது!’ ஓபிஎஸ் ஓபன் டாக்!
’நாங்களும் NDA-வுலதான் இருக்கோம்! நாங்க இல்லனா அதிமுக ஜெயிக்காது!’ ஓபிஎஸ் ஓபன் டாக்!

மா.செக்களிடம் கருத்து கேட்பு 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 89 அமைப்பு ரீதியான மாவட்டங்களில் செயலாற்றி வரும் நிர்வாகிகளை அழைத்து, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முடிவுகள் குறித்து அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவுகள் இயக்கத்தை தோற்றுவித்த எம்.ஜி.ஆர். மற்றும் வளர்த்த ஜெயலலிதா ஆகியோருக்கு நற்பெயர் தேடித்தரும் என்பதைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களுக்கும் தலைமைக் கழக நிர்வாகிகள் நேரடியாகச் சென்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் கழக நிர்வாகிகளின் கூட்டத்தினைக் கூட்டி, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய உள்ளனர். இந்தச் செயல்பாடுகள் அடுத்த 15 தினங்களுக்குள் நடைபெறும் என்றும், அதன் பிறகு நிலையான, நீடித்த நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி நிலைப்பாடு 

தங்களின் நிலைப்பாடு குறித்துப் பேசிய ஓ.பி.எஸ்., கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்டிஏ (NDA) கூட்டணியில் இணைந்து போட்டியிட்டதாகவும், இன்றுவரை அந்தக் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்ற நிலைப்பாடு இருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.

இரட்டை இலை சின்னம் தற்காலிகமே!

இரட்டை இலைச் சின்னம் குறித்துக் கேட்கப்பட்டபோது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் தற்காலிகமாகவே வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். அந்தத் தற்காலிக நிலைப்பாடே தொடர்ந்து நீடித்ததால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சைச் சின்னத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், ராமநாதபுரத்தில் தான் பலாப்பழச் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் குறிப்பிட்டார். ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்கள் மிகுந்த ஆதரவு தந்து தன்னை இரண்டாம் இடத்தில் தக்கவைத்துக் கொண்டதாகவும், 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று 33% வாக்குகள் பெற்றது, தொண்டர்களின் உரிமை மீட்புக் குழுவின் நியாயங்களுக்குக் கிடைத்த நல்ல தீர்ப்பாகவே கருதுவதாகவும் அவர் கூறினார். தன்னைப் தோற்கடிக்க அங்கே ஏற்பட்ட சூழ்ச்சி சூதுகளையும், ஆறு ஓ. பன்னீர்செல்வத்தை அங்கே நிறுத்தியதையும் சுட்டிக்காட்டினார்.

அணி இணைப்பு மற்றும் தலைமை 

பிரிந்து கிடக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகச் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் தாம் கூறி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார். என்.டி.ஏ கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதாகக் கூறப்படுவது பற்றிய கேள்விக்கு, என்.டி.ஏ கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும், மத்திய அமைச்சர் அமித் ஷா இங்கு வந்திருந்தபோது ஒன்பது கட்சிகளும் சேர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் தலைமையை என்டிஏ கூட்டணியில் ஏற்றுக்கொள்வீர்களா என்று நேரடியாகக் கேட்கப்பட்டபோது, "இன்றைய சூழ்நிலையில் நீங்களே சொல்லுங்கள், ஏற்றால் நல்லதா? ஏற்கவில்லை என்றால் நல்லதா?" என்று கூறி, தனது தொண்டர்களின் கருத்துக்களைக் கேட்டு நல்ல முடிவை அறிவிப்பதாக ஏற்கனவே கூறியுள்ளதாகத் தெரிவித்தார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி கருத்துக்களைக் கேட்டிருப்பதாகவும், நேரடியாக மாவட்டங்களுக்குச் சென்று தொண்டர்களின் கருத்துக்களையும் கேட்ட பிறகே முடிவு அறிவிக்கப்படும். தற்போதைக்கு யாருடனும் மறைமுகப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்தார்.

நயினார் நாகேந்திரன் உடன் பேச்சுவார்த்தை 

எடப்பாடி பழனிசாமி தரப்பு உங்களை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, யார் விரும்புகிறார்கள், விரும்பவில்லை என்பதைப் பற்றிக் கவலை இல்லை என்றும், தங்கள் நிலைப்பாடு தொண்டர்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே அமையும் என்றும் பதிலளித்தார். அமித் ஷா வந்தபோது தன்னை அழைக்காதது வருத்தம் அளிப்பதாகக் கூறினார். என்டிஏவில் இருக்கின்ற எடப்பாடி பழனிசாமியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தன்னுடன் பேசிக்கொண்டுதான் இருப்பதாகத் தெரிவித்தார். பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் போன்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

நாங்களின்றி அதிமுக வெற்றி பெறாது

கடந்த காலத்தில் கட்சிகள் இணைந்தபோது, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தானே இரட்டை இலைச் சின்னத்திற்கு கையெழுத்திட்டு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெற்றதாகவும், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தாம் ஏற்றுக்கொண்டதாகவும் நினைவுகூர்ந்தார். கட்சி இணையும்போது சில பொதுவான கருத்துக்கள் உருவாகும் என்றும், மாவட்ட நிர்வாகிகளிடமிருந்து என்ன கருத்துக்கள் வருகின்றன என்பதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற மக்களின் மற்றும் கட்சிக்காரர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தினார். தாங்கள் இணையாமல் அண்ணா தி.மு.க. வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்தார்.

கழக சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட விதிகள் குறித்துப் பேசிய ஓ.பி.எஸ்., புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்ட விதிகள், 50 ஆண்டுகள் ஜெயலலிதாவாலும் கடைப்பிடிக்கப்பட்ட விதிகள் என்றும், அவற்றை திருத்தம் செய்யவோ, ரத்து செய்யவோ கூடாது என்று வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் பங்கம் ஏற்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டினார். எம்.ஜி.ஆர். காலத்தில் ஒரு சாதாரண தொண்டன்கூட பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பு இருந்தது என்றும், தற்போது பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகியாக இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் சாதாரண தொண்டர்கள் போட்டியிடும் சூழலைத் தடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். ஜெயலலிதா கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியதும் காட்டிலும் பறக்கவிடப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

இந்த விஷயங்களுக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். தற்போது உச்ச நீதிமன்றம் ஒரு வழிகாட்டலைச் செய்திருப்பதாகவும், ஆறு வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் சூட்டில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், சிவில் சூட்டில் வழங்கப்படும் தீர்ப்புதான் இறுதி மற்றும் பிணைக்கும் தீர்ப்பு (Final Binding) என்றும் உத்தரவிட்டிருப்பதாகவும் விளக்கினார். 

விஜய் அரசியல் 

சகோதரர் விஜய் அவர்கள் அரசியல் ரீதியான இயக்கத்தைத் தொடங்கியதை வரவேற்பதாகவும், அவருடைய அரசியல் ரீதியான செயல்பாடுகளைப் பார்த்த பிறகே அவரைப் பற்றிய கருத்துக்களைச் சொல்ல முடியும் என்றும், தற்போதைய நிலவரப்படி அவர் ஒரு நல்ல இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.