Nilgiris: மாவட்ட நிர்வாகம் மெத்தனமா.. வறட்சியால் செத்து விழும் மாடுகளை புதைக்க காசு இல்லாமல் அல்லாடும் உரிமையளர்கள்!
Nilgiris: நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் உணவில்லாமல், நாட்டு மாடுகள் மற்றும் எருமைகள், எலும்பும், தோலுமாக படுத்தே கிடக்கிறது. இதனால் தினசரி ஒவ்வொரு கிராமத்திலும், ஐந்து மாடுகள் வரை உயிரிழப்பதாகவும், பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நாட்டு மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தாலும், குறைவாகவே கணக்கு காட்டும் கால்நடை பராமரிப்புத்துறையின் மீது விவசாயிகள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
கடும் வெயில்
இந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் வரலாறு காணாத வகையில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் முதுமலை வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக மசினகுடி , மாவனல்லா, மாயார், பொக்காபுரம், சொக்கநல்லி , சிரியூர், வாழைத்தோட்டம், சிங்காரா, மாவநல்லா, செம்ம நத்தம், தெப்பக்காடு, பூத நத்தம், உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் சுமார் 3000 நாட்டு மாடுகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உணவில்லாமல், நாட்டு மாடுகள் மற்றும் எருமைகள், எலும்பும், தோலுமாக படுத்தே கிடக்கிறது. இதனால் தினசரி ஒவ்வொரு கிராமத்திலும், ஐந்து மாடுகள் வரை உயிரிழப்பதாகவும், பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனபோக்கா?
மழையளவு குறைந்ததால், மசினகுடியில் வறட்சி ஏற்படும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பிப்ரவரி மாதமே எச்சரித்தும், மாவட்ட நிர்வாகம், மெத்தனப்போக்கோடு செயல்பட்டாதே, நாட்டு மாடுகளின் உயிரிழப்புக்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
வறட்சியின் பிடியிலிருந்து, மீளமுடியாமல் கால்நடைகள் மாண்டு வருகின்றன. இதனால் கால் நடை வளப்பவர்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, 15 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.
20 வருடங்களுக்கு முன்பு 25 ஆயிரம் இருந்த மாடுகள் தற்போது 3000க்கும் குறைவாகவே இருக்கிறது.
பிளாஸ்டிக் இல்லா நீலகிரி
பிளாஸ்டிக் இல்லா நீலகிரியில், மசினகுடியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளையே உணவாக உண்ணும் நிலைக்கு மாடுகள் தள்ளப்பட்டுள்ளன.
மாடுகள் தொடர்ச்சியாக இறந்தபோதும், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால், நாம் தமிழர் கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தாதுக்கள் அடங்கிய உணவுப்பொருளை கால்நடை உரிமையாளர்களிடம் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் 140 கால்நடை உரிமையாளர்களுக்கு வழங்கினர். கூடலூர் அதிமுக எம் எல் ஏ சார்பாகவும், தீவனங்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம், மலர் கண்காட்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மாடுகள் இறப்புக்கு கொடுத்திருந்தால், நூற்றுக்கணக்கான மாடுகள் சாகாமல் இருந்திருக்கும்.
இது குறித்து சந்தோஷ்குமார் நம்மிடம் பேசும்போது,
கால்நடை விவசாயம் செய்து வருவதாகவும், வறட்சி காரணமாக தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புண்ணாக்கு, புல் போன்ற எந்த சலுகையும் அரசு தருவதில்லை. சலுகை விலையில் கொடுத்தாலே போதும், இலவசமாக கொடுக்க வேண்டாம். மாயாரில் மட்டும் 200 நாட்டு மாடுகள் இறந்துள்ளன. இறந்த மாட்டுக்கு இழப்பிடு தர அரசு முன் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேபோல் மசினகுடியை சேர்ந்த தங்கவேல் கூறியதாவது,
மசினகுடியில் மட்டும் 50 மாடுகள் இறந்துள்ளதாகவும், உணவு இல்லாமல், மாடுகள் பில்லுக்கு போகும்போது சரிந்து விழுந்து இறப்பதாகவும், பட்டியிலேயே எழுந்து நிற்க முடியாமல், அப்படியே இறந்த மாடுகளை கொண்டு வந்து குவாரியில் போட்டுள்ளோம். அந்த மாடுகளை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புதுறையினர் எரித்துள்ளனர். என்ன காரணம் எனத்தெரியவில்லை.
இறந்த மாடுகளை காட்டி காப்பீடு பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இறந்த மாடுகளை வீட்டிலும் புதைக்க முடியாது, சுற்றிலும் வீடுகள் இருக்கிறது. இறந்த மாட்டை எடுத்து கொண்டு வந்து புதைப்பதற்கு 2000 ஆயிரம் ரூபாய் ஆகும். எங்களிடம் காசு இல்லை அதனால் குவாரியிலதான் கொண்டு வந்து போடுகிறோம்.அது கழுகு , காட்டுப்பன்னிகளுக்கு உணவாகிறது என்றார்.
தமிழ்நாடு அரசு மசினகுடியில் உள்ள நாட்டுமாடு இனத்தை பாதுகாக்க அதிகளவில் பசுந்தீவனங்களை ஒதுக்கீடு செய்து கூடுதல் கால்நடை மருத்துவ துறையினரை பணியமர்த்த வேண்டும் என்றும் அவற்றை போர்க்கால அடிப்படையில் மோற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்