பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் முதல் நூலக கட்டடங்கள் மறுகட்டமைப்பு வரை! பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடந்த பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதற்கு இன்று (25/04/2025) அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதில் பள்ளிக்கல்வித்துறைக்கு பல புதிய அறிவுப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. நேற்று உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கியதும், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விவாதத்துக்கு பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகளை இங்கு காணலாம்.
புதிய அறிவிப்புகள்
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும். கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.
தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும். 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். புதிய தொடக்கப் பள்ளிகள் 13 தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும். ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் வெளியிடப்படும். ரூ.30 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும். இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் வகையில், 10,12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழ்நாடு கல்வித்துறை
தமிழ்நாடு பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற மாணவர் தான் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார் என அமைச்சர் அன்பில் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே கல்வித்துறை மிகவும் நேர்மறையான ரீதியில் முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.

டாபிக்ஸ்