’தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால், வரலாறு மாற்றப்படும்’ அன்பில் மகேஸ் எச்சரிக்கை!
இந்தியாவில் 56 மொழிகள் இந்தியால் விழுங்கப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதானின் மாநிலமான ஒரிய மொழி உட்பட பல்வேறு மொழிகள் இந்தி திணிப்பால் அழிக்கப்பட்டு உள்ளது. அது போன்ற நிலை நமது தாய் மொழிக்கும் வந்துவிடக் கூடாது.

’தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால், வரலாறு மாற்றப்படும். கெட்டவர்கள் நல்லவர்களாகவும், நல்லவர்கள் கெட்டவர்களாகவும் காட்டப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு:-
பி.எம்.ஸ்ரீ பள்ளி என்ற திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது. தரமான கல்வியை வழங்குவதுதான் இதன் நோக்கம் என்கிறார்கள். அப்படியென்றால் தமிழ்நாடு ஏற்கெனவே தரமான கல்வியை தான் வழங்குகிறது. கூடுதலாக என்ன தரம் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையை பி.எம்.ஸ்ரீ திட்டம் மூலம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது. 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறையை கொண்டு வருவது உள்ளிட்ட திட்டங்கள் இதில் உள்ளது.
மீண்டும் மொழிப்போர் கூடாது
இந்தியாவிலேயே இடைநின்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 16 சதவீதமாக இருந்த இடைநின்றல் 5 சதவீதமாக குறைந்து உள்ளது. மீண்டும் ஒரு மொழிப்போர் வரக்கூடாது என்கிற விதத்தில் எங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறோம். ஒன்றிய கல்வி அமைச்சர் இது குறித்து கடிதம் எழுதி உள்ளார். அதில் தமிழை பற்றிய பெருமைகளை பிரதமர் முன்னெடுப்பதாக அதில் கூறி உள்ளார். மேலும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு கையெழுத்து போட வேண்டும் என்று கூறுகிறார். இளைய சமுதாயத்தை மனதில் வைத்து புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டு உள்ளது என்றால் அதில் நிபந்தனைகள் விதிக்க கூடாது.