வரதட்சணையாக இருட்டு கடையை கேட்டு மிரட்டும் கணவர் வீட்டார்.. காவல்துறையில் புகார் அளித்த உரிமையாளர் மகள்.. நடந்தது என்ன?
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீகனிஷ்கா நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணைப் புகார் அளித்துள்ளார்.

திருநெல்வேலியில் இயங்கி வரும் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் ஸ்ரீகனிஷ்கா சிங் நெல்லை மாநக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று நேரில் வந்து புகார் அளித்துள்ளார். மேலும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் வரதட்சணைப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை வீட்டார்
திருமணமாகி 40 நாள்களிலேயே வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றித் தரும்படி, கணவர் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக ஸ்ரீகனிஷ்கா அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மருமகன் வேறு ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து தனது மகளை துன்புறுத்தியதாகவும், தனது மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் இருட்டுக்கடையை வரதட்சணையாக தரவேண்டும் எனவும் மருமகன் பல்ராம் சிங் மிரட்டுவதாகவும் கவிதா சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம்
கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபரான யுவராஜ் சிங் என்பவரின் மகன் பல்ராம் சிங், நெல்லையின் அடையாளமான இருட்டுக்கடையின் உரிமையாளரான கவிதாவின் மகள் கனிஷ்கா ஆகியோரிடையே கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மிகப்பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இருட்டுக்கடை அல்வா கடையின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு கடையின் நிர்வாகம் சார்பில் வாழ்த்தியவர்களுக்கும், வருகை தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து வழக்குரைஞர் கூறுகையில், இருட்டுக்கடையுடன் கூடுதல் வரதட்சணை கேட்டு கனிஷ்காவை கணவர் வீட்டார் துன்புறுத்தியிருக்கிறார்கள். திருமணமான ஒரு சில நாள்களிலேயே அவரது குடும்பத்தினர் இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பிரமாண்டமான வகையில் இந்த திருமணம் நடந்த நிலையில், தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்ததாக மணப்பெண் கனிஷ்கா காவல்துறை ஆணையர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாபிக்ஸ்