Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் களமிறங்கும் மருத்துவர் அபிநயா - யார் இவர்?
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் (ஜூன் 14) இன்று தொடங்கியுள்ளது. வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், வேட்புமனுக்கள் மீது 24 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற 26 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,"தமிழகத்தில் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழ் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம்) போட்டியிட உள்ளார். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று அதில் தெரிவித்துள்ளார்.