NTK vs DMK: ’நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை விவகாரம்!’ திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ntk Vs Dmk: ’நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை விவகாரம்!’ திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்!

NTK vs DMK: ’நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை விவகாரம்!’ திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்!

Kathiravan V HT Tamil
Published Jan 24, 2024 07:20 AM IST

”கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று மைலோடு ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சேவியர் குமார் சென்றார். அங்கு பேச்சுவார்த்தையின் போது நடந்த தகராறில் இஸ்திரி பெட்டி மற்றும் பூந்தொட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டார்”

கொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர் குமார் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு
கொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர் குமார் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியில் வசித்து வரும் சேவியர் குமார் என்பவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மைலோடு கிறிஸ்துவ ஆலையத்தின் பங்குப்பேரவையில் முன்னாள் பொருளாளராகவும் சேவியர் குமார் பொறுப்பு வகித்து  உள்ளார். சேவியர் குமாருக்கு ஜெமிலா என்ற மனைவியும், 2 மகளும் உள்ளனர். 

சேவியர் குமாருக்கும், பங்குபேரவை தரப்பினருக்கும் இடையே நிர்வாக ரீதியாக பிரச்னைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு தரப்பினரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் பங்கு நிர்வாகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சேவியர் குமார் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வந்தார். 

கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று மைலோடு ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சேவியர் குமார் சென்றார். அங்கு பேச்சுவார்த்தையின் போது நடந்த தகராறில் இஸ்திரி பெட்டி மற்றும் பூந்தொட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

இந்த விவகாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார்கள் ராபின்சன், பெனிட்டோ உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி உள்ள நிலையில், தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

இந்த நிலையில் எம்.ஆர்.ரமேஷ்பாபுவை சஸ்பெண்ட் செய்து திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், தக்கலை தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் எம்.ஆர்.ரமேஷ்பாபு, கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளனது. 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.