MKU: விடுதி மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி; போலீசார் விசாரணை!
மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாரா? என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலை கழக விடுதியில் தங்கி இருந்த மாணவி நேற்று மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் மாணவி தவறி விழுந்ததாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 25). இவர் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேஸ்வரி அங்குள்ள விடுதியில் சக மாணவிகளுடன் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் இரவு நேரத்தில் விடுதியின் மேல்தளத்தில் மகேஸ்வரி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென இரவு 11.30 மணியளவில் மரக்கிளைகள் ஒடிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டது. இதையடுத்து மாணவி அலறி துடிப்பது போன்ற சத்தமும் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த மற்ற மாணவிகள் ஓடிவந்து பார்த்தனர். இதில் தரையில் ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைக்கண்ட சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சக மாணவிகள் உடனடியாக மாணவி விழுந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் ஆம்புலன்ஸ் மூலம் மகேஸ்வரியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர விசாரணை இதற்கிடையே சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மாணவி உயிரிழந்த இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாரா? என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வரும் சக மாணவிகளிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.