தொடரும் அமைச்சர் வழக்குகள்! அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் நிலை என்ன?
கடந்த சில மாதமாகவே தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சராக வழக்குகளில் சிக்கி எதிர்பாராத அதிரடி நீதிமன்ற உத்தரவுகளால் திண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக இனி இருக்கும் இந்த ஒரு வருடத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே வியக்கத்தக்க அரசியல் மாற்றங்கள் நடந்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து அரசியலில் பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இந்த ஆட்சி காலத்தில் தான் பாஜக - அதிமுக கூட்டணி பிளவு பட்டது. மேலும் அதிமுகவே இரண்டாக, மூன்றாக எனப் பிரிந்து பல சட்டப் போராட்டங்களை கண்டது. நடிகர் விஜயும் சமீபத்தில் தான் கட்சி ஒன்றை தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு பல வியத்தகு நிகழ்வுகளை காட்டப்போகிறது என்பதில் ஐயமில்லை. இந்த நிலையில் இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் அவ்வப்போது திமுக அமைச்சரவை மாற்றம் பெற்று வந்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் ஒரு அமைச்சரவை மாற்றம் வர வாய்ப்பிருக்கிறது.
அமைச்சர்களும் அவர்கள் சந்திக்கும் வழக்குகளும்
கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு பணி வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதற்கு நடுவே 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த போது செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொடர் முயற்சியின் முடிவாக 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீன் பெற்றார். மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் "அமைச்சர் பதவியில் நீடிக்க விரும்புகிறீர்களா, அல்லது மறுபடியும் சிறைக்கு செல்லாமல் சுதந்திரமாக இருக்க விரும்புகிறீர்களா?" என்று சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் சிக்கி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் அமைச்சர் பொன்முடி பேசிய சர்ச்சை பேச்சு தொடர்பாக ஒரு வழக்கும் விசாரிக்கப்பட்டது. மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது ரூபாய் 3 கோடி வரை சொத்து சேர்த்ததாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி, அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்தது. இந்த நிலையில் அவரது குடும்பம் மற்றும் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்டமனுவினை விசாரித்த கடலூர் நீதிமன்றம் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உட்பட மூன்று பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. அமைச்சர் துரைமுருகன் சொத்து குவிப்பு வழக்கும் உள்ளது. என அமைச்சகர்களை வழக்குகள் துரத்திக் கொண்டிருக்கின்றன.
கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அமைச்சரவையில் மாற்றம்?
அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் எதிர்மறையான திசையில் செல்வதால் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமைச்சர்களின் குற்றப் பின்னணி தெரிந்தும் பதவி கொடுத்த திமுக மீதும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தேர்தல் நடக்க ஒரே ஆண்டு உள்ள சமயத்தில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்குவது திமுகவிற்கு நல்லதல்ல. இது வேறு கட்சிகளை பலப்படுத்தும். ஆளும் கட்சியின் நிலை மாற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

டாபிக்ஸ்