’பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை ஊதி பெரிதாக்காதீர்கள்!’ செய்தியாளர்களிடம் சீறிய அமைச்சர் சேகர்பாபு!
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், அவர்கள் நினைத்தபடி பேரணி நடைபெற்று உள்ளதற்கு அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை ஊதி பெரிதாக்க வேண்டாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி அக்கட்சியின் சார்பில், மாநிலத் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம் வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கோயம்பேட்டில் குவிந்தனர். பேரணிக்கு அனுமதி தருவது தொடர்பாக சுதீஷ் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி கிடைக்காததால், தடையை மீறி அமைதி பேணியை தேமுதிகவினர் நடத்தினர்.
இந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் குருபூஜையில் திமுக சார்பில், முதலமைச்சர் என்னை பங்கேற்க சொன்னார். விஜயகாந்த் அவர்களை பொறுத்தவரை தமிழக மக்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து இருப்பார். இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது அவர் பட்ட வருத்தங்கள் தமிழர்கள் மீது கொண்டு இருந்த மாறாத அன்பை வலியுறுத்தியது. திரையுலகம் சார்பில் பல்வேறு கொள்கைகளை நாட்டின் வளர்ச்சிக்கு, இளைஞர்கள் விழிப்புணர்வுக்கு பிரசாரம் மேற்கொண்டவர். ஏழை எளிய மக்கள் உயர உழைத்து சம்பாதித்த பொருளை செலவு செய்தவர்.
கலைஞர் அவர்களுக்கு விழா எடுத்து தங்க பேனா வழங்கி சரித்திரம் படைத்தவர். கலைஞர் அவர்களின் மறைவின் போது காணொலி வாயிலாக விஜயகாந்த் அவர்கள் வடித்த கண்ணீரை திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் மறக்காது. அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய உடன் நேராக அவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்குதான். திராவிடம் என்ற பெயரை அவரது கட்சியிலேயே வைத்துக் கொண்டு உள்ளார். அரசு முழு மரியாதையை விஜயகாந்திற்கு முதலமைச்சர் வழங்கினார் என தெரிவித்தார்.
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், அவர்கள் நினைத்தபடி பேரணி நடைபெற்று உள்ளதற்கு அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். விஜயகாந்த் மீது கொண்டுள்ள மாறாத பற்று காரணமாக அமைச்சரவையில் இருந்து ஒருவரை அனுப்பி உள்ளார். இதை ஊதி பெரிதாக்கவேண்டாம் என கூறி உள்ளார்.