Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15வது முறையாக காவல் நீட்டிப்பு!
”Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது”
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்ற பணத்தை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பறிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டபோது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு எதிராக ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தது.
இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2ஆவது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள செந்தில் பாலாஜியின் மனு மீது நாளை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே 14 முறை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் 15வது முறையாக காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, கரூரில் புதியதாக கட்டி வரும் வீட்டின் மதிப்பு, பரப்பளவு, செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை கணக்கீடு செய்துள்ளனர். நேற்றைய தினம் செந்தில் பாலாஜியின் நண்பர் மணியின் உணவகத்தில் ஆய்வு நடத்தப்பட்ட நடத்தப்பட்டது.