’துயரம் மக்களுக்கு இல்லை; எடப்பாடிக்குதான்!’ அமைச்சர் சேகர்பாபு கிண்டல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’துயரம் மக்களுக்கு இல்லை; எடப்பாடிக்குதான்!’ அமைச்சர் சேகர்பாபு கிண்டல்!

’துயரம் மக்களுக்கு இல்லை; எடப்பாடிக்குதான்!’ அமைச்சர் சேகர்பாபு கிண்டல்!

Kathiravan V HT Tamil
Published Jun 21, 2025 12:02 PM IST

”துயரமே எடப்பாடிக்கு தான். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என்ற பயத்தில் அவர் இப்படி பேசுகிறார்”

’துயரம் மக்களுக்கு இல்லை; எடப்பாடிக்குதான்!’ அமைச்சர் சேகர்பாபு கிண்டல்!
’துயரம் மக்களுக்கு இல்லை; எடப்பாடிக்குதான்!’ அமைச்சர் சேகர்பாபு கிண்டல்!

சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார். தமிழக மக்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் துயரத்தில் இருப்பதாக எடப்பாடி தெரிவித்த கருத்துக்கு, “துயரமே அவருக்கு தான்” என்று சேகர் பாபு பதிலளித்தார்.

எடப்பாடியின் விமர்சனத்துக்கு பதிலடி

எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக மக்கள் திமுக ஆட்சியில் துயரத்தில் இருப்பதாகக் கூறியதற்கு, அமைச்சர் சேகர் பாபு, “மக்கள் துயரத்தில் இருந்தால், காலையில் எப்படி 7 மணிக்கு எழுந்து நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்? நாங்கள் எப்படி எழுந்து வந்திருப்போம்? துயரமே எடப்பாடிக்கு தான். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என்ற பயத்தில் அவர் இப்படி பேசுகிறார்,” என்று கிண்டலாக தெரிவித்தார். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடியின் பேச்சில் மகிழ்ச்சியான அல்லது மங்களகரமான வார்த்தைகள் இல்லை என்றும், அவரது கருத்துகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.

மக்களின் மகிழ்ச்சி  

தமிழக மக்கள் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், சுபிட்சத்துடனும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். “மக்கள் எழுச்சியுடன் இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர். எடப்பாடியின் துயரமான வார்த்தைகள் மக்களின் மகிழ்ச்சியை பாதிக்காது,” என்று அவர் தெரிவித்தார்.

பாஜகவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், சாதனைகளைப் பற்றி பேசாமல் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதாகவும் கூறியதற்கு பதிலளித்த சேகர் பாபு, “பாஜகவுக்கு நல்ல பாதையில் நடக்கத் தெரியவில்லை. தூசு இருக்கும் இடத்தில் நடந்தால் புகைச்சல் வரத்தான் செய்யும். ஆனால், திமுக கூட்டணி வலுவாக உள்ளது. நாங்கள் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறோம்,” என்று கூறினார்.