’பதவி விலகுகிறாரா செந்தில் பாலாஜி?’ மசோதாவை தாக்கல் செய்த ரகுபதி!
மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி அந்த மசோதவை தாக்கல் செய்தார்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்து உள்ளது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டு உள்ளது.
சட்டப்பேரவை கூட்டம்
மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி அந்த மசோதவை தாக்கல் செய்தார். சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதா அல்லது ராஜினாமா செய்வதா என்பது தொடர்பாக முடிவு செய்ய வரும் திங்கள் கிழமை வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்து உள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்து இருப்பது அவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது.
“ஜாமீனா, அமைச்சர் பதவியா?
இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேசிய மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல் ஸ்ரீனிவாஸ் “ஜாமீன் பெறுவதற்கு முன் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், ஜாமீன் பெற்ற 24 மணி நேரத்தில் மீண்டும் அமைச்சரானார். இதை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது,” என்றார்.
மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம், இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வது இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். உச்ச நீதிமன்றம் அவரை பதவி விலக உத்தரவிட முடியாது, ஆனால் ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என்று ஒரு தேர்வை அவருக்கு விதித்துள்ளது,” என்றார். “சாட்சிகளை பாதிக்கக் கூடாது என்பதே ஜாமீன் வழங்கப்படும்போது முக்கிய நிபந்தனையாக இருக்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பது சாட்சிகளை பாதிக்கும் என்ற அச்சத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது,” என அவர் கூறினார்.
வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) சட்டப்பேரவையின் இறுதி நாளில் இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விவாதத்திற்கு பின்னர் சட்டமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி தொடர்பான முடிவு, திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
