Duraimurugan About ED Raid:’என் வீட்டுக்கு வந்தது யார் என்று தெரியவில்லை’ ED ரெய்டு குறித்து துரைமுருகன் கிண்டல்!
“இந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும்” என செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!
என் வீட்டிற்கு வந்து உள்ளது யார் என்று தெரியாது என அமலாக்கத்துறை ரெய்டு குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லத்தில் இன்று காலை 8.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவரும், திமுக நிர்வாகியுமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லம் மற்றும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் இந்த சோதனை நடைபெறுகின்றது.
இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரம், காந்தி மண்டபம் சாலையில் உள்ள இல்லத்தில் வழக்கறிஞர்கள் உடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ரெய்டு குறித்த கேள்விக்கு, “இந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும். என் வீட்டுக்கு வந்தது யார் என்று தெரியவில்லை. எனது வீட்டில் யாருமே கிடையாது. 2 வேலைக்காரர்கள்தான் அங்கு உள்ளார்கள். அங்கு உள்ளவர்கள் எந்த டிப்பார்ட்மண்டில் இருந்து வந்தார்கள் என்று தெரியாது” என கூறினார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல்! நடந்தது என்ன?
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தல் பணம் பறிமுதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு, ஏப்ரல் 18 தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இந்த நிலையில் துரைமுருகன் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதன் எதிரொலியாக வேலூர் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலைரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது.
இதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில், திமுகவின் டி.எம். கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார்.