Duraimurugan About ED Raid:’என் வீட்டுக்கு வந்தது யார் என்று தெரியவில்லை’ ED ரெய்டு குறித்து துரைமுருகன் கிண்டல்!
“இந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும்” என செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!

என் வீட்டிற்கு வந்து உள்ளது யார் என்று தெரியாது என அமலாக்கத்துறை ரெய்டு குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லத்தில் இன்று காலை 8.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவரும், திமுக நிர்வாகியுமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லம் மற்றும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் இந்த சோதனை நடைபெறுகின்றது.
இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரம், காந்தி மண்டபம் சாலையில் உள்ள இல்லத்தில் வழக்கறிஞர்கள் உடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ரெய்டு குறித்த கேள்விக்கு, “இந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும். என் வீட்டுக்கு வந்தது யார் என்று தெரியவில்லை. எனது வீட்டில் யாருமே கிடையாது. 2 வேலைக்காரர்கள்தான் அங்கு உள்ளார்கள். அங்கு உள்ளவர்கள் எந்த டிப்பார்ட்மண்டில் இருந்து வந்தார்கள் என்று தெரியாது” என கூறினார்.