Duraimurugan: பொங்கல் பரிசுத் தொகுப்பு ரொக்கம்.. ‘தேர்தல் வரும் போது பார்க்கலாம்’.. உண்மையை சொன்ன துரைமுருகன்!
தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது குறித்து பார்த்துக்கொள்ளலாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த திட்டம் அங்கு மட்டும் செயல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்குவது குறித்து பாப்பிரெட்டிபட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பேசிய அவர், “அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட ரூ.2500 கொடுக்கப்பட்டது. ஆனால், அப்போது ரூ.5000 கொடுக்க வேண்டும் என திமுக கூறியது. இப்போது ரூ.1,000 கூட கொடுக்கவில்லை.” என்று கூறியிருந்தார்.
அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, “இந்த பொங்கல் பண்டிகை இனிக்க வேண்டும் என்றால் 1000 ரூபாய் கொடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், 2021 ஆம் ஆண்டு தேர்தல் இருந்தது. அதனால் நீங்கள் (அதிமுக) ரூ.2,500 கொடுத்தீர்கள். ஆனால் இப்போது தேர்தல் காலம் இல்லை. தேர்தல் வரும்போது பார்க்கலாம்." என்றார். அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு பேரவையில் கலகலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ச்சியாக அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், 2009-ல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். ஆனால், அதன் பிறகு அதிமுக ஆட்சியின் போதம் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை. ஆனால், 2021 ஆம் ஆண்டு தேர்தல் வந்தபோதுதான் அதிமுக அரசு பரிசுத் தொகை வழங்கியது என்று கூறினார்.
பரிசுத்தொகை வழங்காதது ஏன்?
2025 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் எவ்வளவு ரூபாய் பணம் தரப்போவதாக ஆட்சியாளர்கள் அறிவிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களிடையே இருந்தது. ஆனால், எப்போதும் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் எதுவும் இல்லை என்ற அறிவிப்பு சற்றே ஏமாற்றம் அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பரிசுத்தொகை வழங்காததை எதிர்க்கட்சிகள் விமர்சித்தபோதிலும், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், பரிசுத் தொகுப்புடன் பணம் தர முடியவில்லை என ஆளும் திமுக அரசு விளக்கமளித்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது குறித்து தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
தொடர்புடையை செய்திகள்