Rameshwaram temple:நகை எடை குறைவு விவாரத்தில் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை
ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலில் நகைகள் தேய்மானத்துக்கு, அதை கையாண்ட பணியாளர்கள் ரூ.7,49,964 செலுத்த கோரி ராமநாதஸ்வாமி தேவஸ்தான செயல் அலுவலகத்தின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த உதயகுமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலில் கைங்கர்யம் குருக்களாக பணியாற்றுகிறேன். கோயிலில் உள்ள சாமியின் தங்கம் மற்றும் வெள்ளி பொருள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. அப்போது, நகைகளின் எடை அளவு குறைந்துள்ளதாகவும், இதற்குரிய தொகையாக ரூ.7,49,964ஐ நகைகளை கையாண்ட பணியாளர்கள் நவம்பர் 30க்குள் செலுத்துமாறு ராமநாதஸ்வாமி தேவஸ்தான செயல் அலுவலர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
புராதன தங்க நகைகள், வெள்ளி கவசங்கள் பூஜை பொருள்கள் தினசரி பூஜை, திருவிழா காலங்களில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு அலுவலர்களின் மேற்பார்வையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
அந்த வகையில் தினசரி மற்றும் திருவிழா கால பயன்பாட்டால் நகைகளில் தேய்மானம் ஏற்படுவது இயற்கை. இதை கருத்தில் கொண்டு நகைகள் தேய்மானத்துக்கு உரிய பணத்தை எங்களிடம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். எனவே இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் நோடீஸ் பெறப்பட்டவரில் மேலும் சிலரும் மனு செய்திருந்தனர்.
இதையடுத்து இந்த மனு நீதிபதி முகம்மது ஷபீக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "செயல் அலுவலரின் நோட்டீஸுக்கு இடைகால தடை விதித்து, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்து" நீதிபதி உத்தரவிட்டார்.
டாபிக்ஸ்