தமிழக சுற்றுலாதலங்களில் மாற்று திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்ய உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் மாற்று திறனாளிகள் சுலபமாக சென்றடையும் வகையிலும், கையாளும் வகையிலும் சுற்றுலா வழிகாட்டி புத்தகம் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்நத வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழகத்தில் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும், குறிப்பாக குற்றால அருவிகளுக்கு அனைத்து வகை மாற்று திறனாளிகளும் சுலபமாக செல்வதற்கு போதுமான வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "தமிழக அரசு மாற்று திறனாளிகள் நலன்களை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
சமீபத்தில் மாற்று திறனாளிகள் மெரினா கடற்கரையின் அழகை அருகே சென்று ரசிக்கவும், உணரவும் கடற்கரையில் நிரந்தர சாய்வு பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது. மாற்று திறனாளிகளிடம் எந்த விதமான பாகுபாடும் பார்ப்பதில்லை.
அனைத்து சுற்றுலா இடங்களையும் மாற்று திறனாளிகள் சுலபமாக செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
இந்த வாதத்தை கேட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கேரளா முழுவதும் உள்ள சுற்றுலா இடங்களுக்கு மாற்று திறனாளிகள் சுலபமாக செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு நிபுணர்கள், மாற்று திறனாளிகளிடம் கருத்துகள் கேட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களுக்கு அவர்கள் சுலபமாக செல்வதற்கு தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும்.
அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சுலபமாக சென்றடையும் வகையிலும், மாற்று திறனாளிகள் கையாளும் வகையில் சுற்றுலா வழிகாட்டி புத்தகமும் வெளியிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
டாபிக்ஸ்