Senthil Balaji: அவதூறு கருத்து - பாஜக நிர்மல்குமாருக்கு தடை நீடிப்பு
தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக தன்னை பற்றி ஆதாரமற்ற கருத்துகளை தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரப்பி வருகிறார். எனவே அதுபோன்ற கருத்துகளை அவர் பேச தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறாக பேச நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நிர்மல் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனக்கு எதிரான இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளார்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நிர்மல்குமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு செந்தில் பாலாஜி தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி வழக்கு குறித்து டுவிட்டர், யூடியூப் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதுவரை செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க நிர்மல் குமாருக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.