MHC: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக பொதுகூட்டம் - காவல்துறை பதில் அளிக்க உத்தரவு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து புதுக்கோட்டை,வேங்கைவயல் கிராமத்தில் பொதுகூட்டம் நடத்த காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததை ரத்து செய்து பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க கோரிய வழக்கில் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து மார்ச் 19ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு கீரனூர் காவல் துறையினரிடம் அனுமதி கோரி மனு செய்தோம்.
ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு எனக் கூறி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குடிநீர் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பொது கூட்டம் நடத்த காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததை ரத்து செய்து பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
டாபிக்ஸ்