MHC: வனவிலங்கு நடமாட்டத்தை தடுக்க மின்வேலிகள் வேண்டும் - அரசு பதிலளிக்க உத்தரவு
வனவிலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தடுக்கவும்,பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதை தவிர்க்கவும் சூரிய ஒளியில் இயங்கும் மின்வேலிகள் அமைக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர், தமிழ்நாடு முதன்மை தலைமை காப்பாளர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், கருத்தபிள்ளையூர் கிராமத்தை சேர்ந்த வின்சென்ட் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம், குற்றாலம் மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மக்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள், நீலகிரி தார், கரடிகள், புலிகள், சிறுத்தைகள், பிளாக் பாந்தர், சாம்பார் மான், மிளா மான், கவுர், ரட்டி, மங்கூஸ், இந்திய பிரான் மங்கூஸ்,எலிகள் மற்றும் பல விலங்கு இனங்கள் வசித்து வருகின்றன.
இங்கு உள்ள விலங்குகள் சில விவசாய நிலத்திலுள்ள மரங்கள், பயிர்கள் சேதப்படுத்துவதோடு, சில நேரங்களில் மனிதர்களையும் தாக்குகிறது.
சமீபத்தில் கரடி தாக்கி இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அதே போல் தென்னை மரங்கள், வாழை மரங்கள், பயிர்கள் ஆகியவை வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிநவீன மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரணம், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் எல்லை பகுதிகளில் சூரிய மின்சக்தியால் இயங்கக்கூடிய மின் வேலிகள் அமைத்து விலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க கோரி மனு அளித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே தென்காசி மாவட்டம் மேற்கூறிய பகுதிகள், மேற்கு தொடர்ச்சி எல்லை பகுதிகளில் சூரிய ஒளி மின்சக்தியால் இயங்ககூடிய மின்வேலிகள் அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரிய கெளர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தருமபுரி அருகே மின்வேலியில் சிக்கி அண்மையில் உயிரிழந்தது பற்றி கூறப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பிலிருந்து, சூரிய மின் சக்தியால் இயங்ககூடிய மின்வேலிகளை அமைப்பது மூலம் வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க முடியும். விலங்குகளுக்கு இதனால் ஆபத்துகள் ஏற்படாது என வாதம் முன் வைக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர், தமிழ்நாடு முதன்மை தலைமை காப்பாளர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏபரல் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
டாபிக்ஸ்