RSS rally: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் - உயர்நீதிமன்றம் அனுமதி
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு கோரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. அத்துடன் ஊர்வலத்துக்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்பட 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யதனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்த மனுவில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆர்எஸ்எஸ் சீருடையுடன் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் செல்ல தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் எந்த பாதையில் செல்கிறார்கள் என தகவல்கள் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு, ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக்கூடாது என்றும், காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவை தொடர்பான எந்த உறுதியையும், மனுதாரர்கள் தரப்பில் காவல்துறையிடம் தாக்கல் செய்யவில்லை. குறிப்பாக ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதற்றமான பகுதிகள் இருக்கலாம் என்பதால், அவர்கள் செல்லும் வழியை துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. வுஇதனை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது. ஊர்வலத்தை காவல்துறை ஒழுங்குபடுத்தலாம் என்றும், ஆனால் அனுமதி மறுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த காலத்திலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டது. இதுவரை எந்த ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை. புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஞாயிற்றுகிழமை ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. நாங்கள் சட்டத்தை மதிக்கக்கூடியவர்கள் என்பதால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் மனுதாரர்கள் தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதற்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலத்தை குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் நடத்துவதாக குறிப்பிடாமல், மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பதால், காவல்துறை தரப்பில் முடிவெடுக்க தாமதம் ஆவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறுவதாக இருக்கும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
அணிவகுப்பு ஊர்வலத்துக்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.