மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.. வைகோ அறிக்கை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.. வைகோ அறிக்கை

மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.. வைகோ அறிக்கை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 24, 2025 02:10 PM IST

முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், தந்தை பெரியார், அண்ணா ஆகியோரை இழிவுபடுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெற்றிருந்தது கடும் கண்டனத்துக்குரியது. மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.. வைகோ அறிக்கை
மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.. வைகோ அறிக்கை

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பாஜக தனது அரசியல் சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு சதியில் ஈடுபட்டுள்ளது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பேசப்பட்ட கருத்துகள் மூலம் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

இது முதல் முறையல்ல

தமிழ்நாட்டில் முருகனை முன் வைத்து பாஜக, அரசியலை முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பாஜக 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஜூலையில் முருகனை போற்றி பாடும் கந்த சஷ்டிக் கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும், பாஜகவும் போராட்டம் நடத்தின. அதன் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பாஜகவின் அப்போதைய மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.

திருத்தணியில் இருந்து தனது வேல் யாத்திரையைத் தொடங்கிய எல்.முருகனை காவல்துறை கைது செய்தது. இதுபோல, தினமும் வேல் யாத்திரை செய்ய முருகன் முயல்வதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தது. முடிவில் 2020 டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு மாநாட்டை நடத்தினர். இதில் அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பாஜகவின் அரசியல் அழைப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜுன் 10 ஆம் தேதி மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இது பாஜகவின் அரசியல் அழைப்பு என்பதை மக்கள் அறிவார்கள்.

தமிழ் கடவுள் என்று தமிழர்கள் கொண்டாடும் குன்றுதோறாடும் குமரனுக்கு ஆண்டு முழுவதும் தைப்பூசம், விசாகம், சூரசம்ஹாரம், கந்த சஷ்டி திருவிழா மற்றும் பங்குனி உத்திர விழா என பல விழாக்கள் தமிழ்நாட்டில் காலம் காலமாக நடந்து வருகின்றன. ஆனால் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, மற்றும் பாஜகவும் முருகனுக்கு ஆபத்து என்ற பிம்பத்தைக் கட்டமைக்க விழைவதை தமிழ் மக்கள் புறந்தள்ளுவார்கள். முருக பக்த மாநாட்டு தீர்மானங்கள் அரசியலையே பேசுகின்றன. திருப்பரங்குன்றத்தை முன் வைத்து மத வெறியைத் தூண்டுகின்றன.

நியாயப்படுத்த முடியாது

அறநிலையத் துறையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற தீர்மானம் பாஜகவின் அரசியல் கோரிக்கையாகும். சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்கு கேட்டு நிறைவேற்றப்பட்ட இன்னொரு தீர்மானம் மாநாட்டின் நோக்கத்தை புலப்படுத்துகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், தந்தை பெரியார், அண்ணா ஆகியோரை இழிவுபடுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெற்றிருந்தது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது. மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. மதம் சார்ந்த செயல்பாடுகள் எப்போதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை

2021ஆம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பாஜக முருகனை முன்னிறுத்தி வேல் யாத்திரையை நடத்தியும் கூட, 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் நான்கு இடங்களை மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதே நிலை தான் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் நடக்கும். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் முருகன் மாநாடு

இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முருகன் மாநாடு மதுரையில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்களான ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, உதயகுமார், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியும், ஆர்எஸ்எஸ் மூத்த உறுப்பினர்கள், ஆன்மீகவாதிகள் உள்பட பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த சர்ச்சை காணொளி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திமுக, திக உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.