MHC: புதுக்கோட்டை ஒப்பந்ததாரர் வழக்கு-அறிக்கை தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவு!
ஒப்பந்ததாரர் பட்டியலில் இருந்து நீக்கி மாவட்ட திட்ட இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் விமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதில், "ஊரக வளர்ச்சித்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆன்லைன் ஒப்பந்தத்தில் முறையாக பங்கு பெற்றேன் இருந்தும் தொழில்நுட்பக் கோலரின் காரணமாக நான் நிராகரிக்கப்பட்டேன்.
2022ஆம் ஆண்டு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதிலும் நான் பங்கேற்றேன் மற்ற அனைவரையும் விட குறைந்த தொகைக்கு நான் ஒப்பந்தம் கோரியிருந்தேன். ஒப்பந்தத்தில் இருந்து என்னை விலகும் படி தொடர்ச்சியாக மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் மற்றும் மாவட்ட செயற்பொறியாளர் தொடர்ச்சியாக மிரட்டல் விட்டு வந்தனர்.
அனைத்து ஒப்பந்ததாரர்களும் 20% கமிஷன் கொடுத்ததாகவும் தானும் கொடுக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தினர். லஞ்சம் கொடுக்க மறுத்ததன் காரணமாக வேண்டுமென்றே ஒப்பந்தத்திற்காக நான் அளித்த சான்றிதழில் எனது கையொப்பம் போலியானது என்றும் கூறி ஆய்வு மேற்கொள்ளாமல், முன்னறிவிப்பும் செய்யாமல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் என்னை ஒப்பந்ததாரர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது சட்ட விரோதமானது இப்படி உத்தரவிடுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை.
மேலும் திட்ட இயக்குனர் கருப்புசாமி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி நிர்வாக பொறியாளர், ஜோசபின் நிர்மலா, ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளது பற்றி லஞ்ச ஒழிப்பில் புகார் அளித்துள்ளேன். இதன் காரணமாகவே என்னை ஒப்பந்ததாரர் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர்.எனவே, ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் இருந்து என்னை நீக்கம் செய்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கிராம சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தின் ஒப்பந்தத்தை இறுதி படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.
டாபிக்ஸ்