MHC: திருமணமான பெண்ணுக்கு 6 மாதத்தில் கருணைப்பணி: ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!
திருமணமான பெண்ணுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட வேளாண் விற்பனைக் கூடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றியவர் திலகம். பணிக் காலத்தில் கடந்த 2009-ல் திடீரென இறந்தார். இதனால் தனக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி கேட்டு திலகத்தின் மகள் பர்வதவர்த்தினி விண்ணப்பித்தார். திருமணமானவர் என்பதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பர்வதவர்த்தினி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, வாரிசுப் பணி வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்தார். மேலும் மனுவை வேளாண் விற்பனை சங்க செயலர் 12 வாரத்தில் பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதை எதிர்த்து தொழிலாளர் துறை முதன்மை செயலர் மற்றும் வேளாண் விற்பனைத்துறை செயலர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, "வேளாண் விற்பனை துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய திலகம் என்பவர் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து திருமணமான அவரது மகள் கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையிலான பணியைப் பெற உரிமையுள்ளது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து இந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக விதிகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவுகளும் அதை தெளிவுபடுத்தியுள்ளன. ஆகவே, இந்த வழக்கை பொறுத்தவரை மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ஆறு மாதங்களுக்குள்ளாக கருணை அடிப்படையிலான பணியை வழங்க வேண்டும் என தமிழக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்