Madurai High Court : குருத்திகா பட்டேலை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு
ஆட்கொணர்வு மனு சம்பந்தப்பட்ட பெண் மேஜராக உள்ளார்
தென்காசி இளம்பெண் குருத்திகா பட்டேலிடம் நடந்த விசாரணையில் அவர் பெற்றோருடன் செல்வதாக கூறியுள்ளதாக நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையல் இன்று நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித். இவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோயில் தெருவில் வசித்து வருகிறேன் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வருகிறேன். இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன்பட்டேல், இவருடைய மகள் குருத்திகாபட்டேல். நானும் குருத்திகாபட்டேலும் கடந்த 6வருடங்களாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் கடந்த 27-12-2022 அன்று நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். இதற்கு இடையில் தன்னுடைய மகளைக் காணவில்லை எனக் கூறி நவீன்பட்டேல் குற்றம் காவல்நிலையத்தில் புகாா் செய்தனர்.
இதனையடுத்து 04-01-23 அன்று நானும் எனது மனைவி குருத்திகாபட்டேலும் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினோம். விசாரணையின் முடிவில் குருத்திகா பட்டேல், தன்னுடைய கணவர் என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து என்னுடன் அழைத்து சென்றேன். இந்நிலையில் கடந்த 14ம் தேதியன்று என்னுடைய மனைவியுடன் தென்காசியில் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வந்த நவீன்பட்டேல் மற்றும் அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் என்னுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நான் முதல்வரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன் இந்த புகாா் மனுவின் மீதான விசாரணைக்காக ஜனவரி 25ம் தேதி நான் என் மனைவி குருத்திகாபட்டேலும், தந்தை, சகோதரா் ஆகியோருடன் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினேன். ஆனால், நவீன்பட்டேல் மாலையில் காவல்நிலையம் வருவதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் நான் எனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் சென்று மீண்டும் காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, நவீன்பட்டேல், அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் என்னை தாக்கி எனது மனைவி குருத்திகா பட்டேலை கடத்தி சென்றனர். நான் இது குறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தேன். காவல்துறையினர் புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், குருத்திகா பட்டேல்லை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் குருத்திகா பட்டேல் கடத்தி சென்று விட்டனர். எனவே, குருத்திகா பட்டேல் மீட்டு ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், அரசு தரப்பில், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட குருத்திகா பட்டேல் அனுப்பினால் விசாரணை பாதிக்கும் மேலும் குருத்திகா பட்டேல் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். அதனால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குருத்திகா பட்டேலை அனுப்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் 164 வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறட்டும். அதேசமயம் இது ஆட்கொணர்வு மனு சம்பந்தப்பட்ட பெண் மேஜராக உள்ளார். எனவே சம்பந்தப்பட்ட பெண்ணை மதியம் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
டாபிக்ஸ்