Chandrayaan - 2 failure: சந்திரயான்-2 தோல்வியா? விளக்கம் அளிக்க ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: சந்திரயான்- 2 மிஷன் உண்மையிலேயே தோல்வி அடைந்ததா? என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அந்த திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ கூறியது. ஆனால், சந்திரயான்- 2 மிஷன் பணி தோல்வியடையவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்
அமெரிக்காவின் நாசா, சிஐஏவால் திட்டமிட்டு சந்திரயான் -2 திசை திருப்பபட்டது. போலி மற்றும் தவறான புகைப்படங்களை வெளியிட்டு சந்திராயான் முடிவை தவறாக வெளியிட்டது. இதை கடந்த 2015 ஆம் ஆண்டு நான் கண்டுபிடித்தேன். பிறகு திருவனந்தபுரம் விஎஸ்எஸ்சி தலைவர் அலுவலகத்தில் இஸ்ரோ அதிகாரிகளிடம் 2 மணி நேரம் விளக்கமளித்து எனது ஆய்வு, கண்டுபிடிப்பு பற்றி விளக்கினேன்.
என்னுடைய கண்டுபிடிப்பை சரிபார்க்க பேலோட் (அறிவியல் கருவி) சேர்ப்பதாக இஸ்ரோ உறுதியளித்தது. ஆனால், பின்னர் இஸ்ரோ உறுதியளித்தபடி பேலோட் சேர்க்கவில்லை . நான் அனுப்பிய மின்னஞ்சல்கள், மனுக்களுக்கு பதிலளிக்கவில்லை. மேலும் நாசா, சிஐஏ தாங்கள் சொல்வது போல் இந்தியாவை கேட்க வைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு உள்ளது.
எனவே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், சந்திரயான்- 2 மிஷன் உண்மையிலேயே தோல்வி அடைந்ததா? என்பது குறித்து விண்வெளி ஆராய்ச்சித் துறை சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
டாபிக்ஸ்