liquor sale: மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லையா? - ஹைகோர்ட் கேள்வி
மதுரை: பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிடக் கோரி குறிப்பிடப்பட்டிருந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தமிழகத்தில் தான் குறைவான நேரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. மதுவின் அளவு குறைவாகவும், விலை அதிகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா கால கட்டத்தில் மற்ற மாநிலங்களில் இருந்து மது வாங்கி வந்ததாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. மதுப்பிரியர்கள் மாற்றுவழியையே யோசிக்கின்றனர். 21 வயதுக்கு கீழானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், "பிற மாநிலங்களை விட குறைவான நேரம் டாஸ்மாக் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளது. மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசுத் தரப்பில், அரசு இந்த விசயத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பதை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசுக்கு வந்த பரிந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
டாபிக்ஸ்