டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ’ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆதாரங்கள் போதுமானதாக இல்லை’ உயர்நீதிமன்றம்!
”ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், அமலாக்கத் துறையின் வாதங்களுடன் தொடர்பு இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது”

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை (ED) சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறையின் சோதனை மற்றும் சீல் வைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் அமலாக்கத் துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தது.
வழக்கின் பின்னணி
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அமலாக்கத் துறை ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மற்றும் தொழிலதிபர் ரத்தீஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. சோதனையைத் தொடர்ந்து, விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக, ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.