Kaniyamur: கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியை முழுமையாக திறக்க ஐகோர்ட் அனுமதி
Kallakurichi: கனியாமூரில் கடந்த ஆண்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை திறக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலத்தை அடுத்துள்ள கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் பள்ளியை முழுமையாக திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்தப் பள்ளியின் 3வது தளத்திற்கு சீல் வைக்கப்பட்டது நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
பள்ளியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த மாணவியின் தாய் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்கள், மேஜைகள், கண்ணாடிகள் என கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் பயன்படுத்தி அடித்து நொறுக்கி, எரித்து சாம்பலாக்கினர். பள்ளி வாகனங்களுக்கும் தீவைத்தனர். பள்ளியில் இருந்த பொருட்களையும் சூறையாடினர்.
இந்த வன்முறையில் போலீஸ் வாகனத்தையும் போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த பள்ளி மூடப்பட்டது.
பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால் பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த பள்ளி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதை ஏற்று 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதியளித்து நீதிபதி கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அந்தப் பள்ளியை முழுமையாக திறக்க அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பள்ளியின் மூன்றாவது தளத்திற்கு வைக்கப்பட்ட சீல் நீடிக்க வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
உயிரிழந்த மாணவியின் தாயார் பள்ளியைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவையும் ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
டாபிக்ஸ்