Tobacco Products Case: புகையிலை பொருட்கள் தடை ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி!
Tobacco Products Ban Case: தமிழ்நாட்டில் புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழ்நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்குத் தடை விதித்து உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆண்டு தோறும் அறிவிப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்கள் மேல் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட அறிவிப்பு ஆடைகளை எதிர்த்தும், குற்ற நடவடிக்கை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதேபோல் தடையை மீறிய நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளனர்.
அப்போது நீதிபதிகள்," உணவின் பாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்குக் கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலை உணவுப் பொருளாகச் சுட்டிக் காட்டப்படவில்லை. அதேசமயம் குட்கா மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்தத் தடை மற்றும் வினியோகம் முறைப்படுத்துதல் சட்டத்தில் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவது பற்றி மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் புகையிலை பொருட்களுக்கு முழுமையான தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. அதேசமயம் தடை விதிப்பதற்கான அதிகாரமும் அதில் வழங்கப்படவில்லை. இருந்தாலும் கூட அவசரநிலை கருதி தற்காலிக தடை செய்ய மட்டுமே உணவு பாதுகாப்புச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகாரத்தை மீறி புகையிலை பொருட்களுக்குத் தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் அந்த அறிவிப்பாணையின்படி எடுக்கப்பட்ட குற்றம் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகிறது" என தெரிவித்தனர்.