நீட் மறுதேர்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
”சென்னையில் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரா பள்ளியில் தேர்வெழுதிய 13 மாணவர்கள், குன்றத்தூர் அரசுப் பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்கள், மற்றும் கேக்கரையைச் சேர்ந்த 1 மாணவர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு”

நீட் மறுதேர்வு கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின்போது, சென்னையில் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரா பள்ளியில் தேர்வெழுதிய 13 மாணவர்கள், குன்றத்தூர் அரசுப் பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்கள், மற்றும் கேக்கரையைச் சேர்ந்த 1 மாணவர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மாணவர்கள், மறுதேர்வு நடத்த வேண்டும் மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. பின்னர், தேசிய தேர்வு முகமை (NTA) தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், மின்சாரத் துண்டிப்பு தேர்வுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதாகவும், மறுதேர்வு நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.