’நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை!’ சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை!’ சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

’நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை!’ சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Kathiravan V HT Tamil
Published May 17, 2025 04:10 PM IST

”மின்தடை காரணமாக கவனச்சிதறல் ஏற்பட்டதால் திறமையாக தேர்வு எழுத முடியவில்லை என்றும், கூடுதல் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது”

’நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை!’ சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
’நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை!’ சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மின்தடையால் மாணவர்கள் பாதிப்பு

கடந்த மே 4, 2025 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில், ஆவடி கேந்திர வித்யாலய பள்ளியில் 464 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு பிற்பகல் 2:00 மணிக்குத் தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3:00 முதல் 4:15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை. மேலும், தேர்வு மையத்தில் மழைநீர் புகுந்ததால், மாற்று இடத்தில் தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டதாகவும், இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் மனு

திருவள்ளூரைச் சேர்ந்த சத்தியபிரியா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன், ராணிப்பேட்டையைச் சேர்ந்த அக்ஷயா உள்ளிட்ட 13 மாணவர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மின்தடை காரணமாக கவனச்சிதறல் ஏற்பட்டதால் திறமையாக தேர்வு எழுத முடியவில்லை என்றும், கூடுதல் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது. தேசிய தேர்வு முகமையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவப் படிப்பு என்ற கனவை நனவாக்குவதற்கு சிறு குறைபாடுகளும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு

நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மின்தடை குறித்து ஆய்வு செய்யவும், மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கவும் கால அவகாசம் கோரினார். இதனை ஏற்ற நீதிபதி, மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 2, 2025-க்கு தள்ளிவைத்தார்.