’தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளைக்கு அமைச்சர் துரைமுருகனே காரணம்!’ அவரது இலாகாவை பறிக்க வேண்டும்! லாரி ஓனர்கள் சங்கம்!
இப்பிரச்னையில் முதலமைச்சர் தலையிட்டு கனிமவளத்துறையை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து பறித்து, முதலமைச்சரே நேரடியாக பொறுப்பை ஏற்க வேண்டும்

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கனிமவளக் கொள்ளைக்கு, அமைச்சர் துரைமுருகனும், அதிகாரிகளுமே காரணம் என மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டஐப்புத் தலைவர் யுவராஜ் தெரிவித்து உள்ளார்.
டன் கணக்கில் கடத்தப்படும் கனிமங்கள்!
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் 4 ஆயிரத்திற்கும் ஏற்பட்ட ‘கிரஷர்’ இயந்திரங்கள், அரசின் அனுமதி இல்லாமல் இயங்கி கொண்டு இருக்கின்றன. இந்த கிரஷர்கள் மூலம் அரைக்கப்படும் கனிமங்கள் அனைத்தும் கேரள, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாள் தோறும் டன் கணக்கில் கொண்டு செல்லப்படுகின்றன.
மாவட்ட ஆட்சியரிடம் சொல்லியும் பலன் இல்லை
தமிழ்நாட்டிலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான், அதிக அளவு குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இங்குள்ள மலைகள் அதிக அளவில் உடைக்கப்பட்டு, கிடைக்கும் ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்டவை நாள் தோறும் ஒரு லட்சம் டன் வீதம், கர்நாடக மாநிலத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கும் கனிமவளக் கொள்ளை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கூறியும், அவர் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை தருகிறது.
அமைச்சர் துரைமுருகனே காரணம்!
அப்பகுதியில் இங்கும் 38 கிரஷர் இயந்திரங்கள் வாயிலாக, தரமற்ற எம்-சாண்ட் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குவாரிகளில் ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கனிமவளக் கொள்ளைக்கு, துறையின் அமைச்சர் துரைமுருகனும், அதிகாரிகளுமே காரணம். கனிமவளக் கொள்ளை குறித்து 2020இல் இருந்தே தொடர் மனு கொடுத்து வருகிறோம். இதில் அமைச்சரும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
துரைமுருகனிடம் இருந்து இலாகாவை பறிக்க வேண்டும்
கனிமவள பொருட்களை ஏற்றி செல்லும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களை கொள்ளையில் ஈடுபடுவோர் என சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்வது கண்டனத்திற்கு உரியது. கனிமவளக் கொள்ளை குறித்து தமிழக அரசுக்கு புகார் தெரிவிக்க, 10 மாவட்டங்களில் ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை அரசு செயல்படுத்த வேண்டும். மேலும் இப்பிரச்னையில் முதலமைச்சர் தலையிட்டு கனிமவளத்துறையை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து பறித்து, முதலமைச்சரே நேரடியாக பொறுப்பை ஏற்க வேண்டும் என அவர் கூறினார்.
