OPS மேல்முறையீட்டு வழக்கை சட்டக்குழு எதிர்கொள்ளும்! ஜெயக்குமார் பேட்டி
அதிமுகவின் சட்டதிட்ட விதிகளின் படி செல்லும் காரணத்தால் மகிழ்ச்சியான நல்ல தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது - ஜெயக்குமார்
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என கடந்த மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இரு தரப்பு வாதங்களும் கடந்த 22ஆம் தேதி நிறைவடந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிக் குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கி உள்ளார்.
அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை மற்றும் பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை கோரும் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதான வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ் மகன் உசேன் ஆகியோருக்கு அவசாகம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பின் மூலம் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்பதும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வித தடையும் இல்லை என்பது உறுதியான நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் அமர்வில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் நாளை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் பேட்டி
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தொடண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க வகையில் மிகப்பெரிய எழுர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் சட்டதிட்ட விதிகளின் படி செல்லும் காரணத்தால் மகிழ்ச்சியான நல்ல தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. இதன் மூலம் இடைக்கால பொதுச்செயலாளர் பொதுச்செயலாளராக வர எந்த தடையும் இல்லை.
கேள்வி:- ஓபிஎஸ் இரண்டு பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வுக்கு சென்றுள்ளாரே?
கட்சியின் சட்டக்குழு அதனை எதிர்கொள்ளும்
கேள்வி:- பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்?
மேற்கண்ட நடவடிக்கைகளை கட்சி எடுக்கும்