Justice Party: ’பெரியாரை கதறவிட்ட தமிழர் செல்வம்!’ யார் இந்த சர் AT.பன்னீர் செல்வம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Justice Party: ’பெரியாரை கதறவிட்ட தமிழர் செல்வம்!’ யார் இந்த சர் At.பன்னீர் செல்வம்!

Justice Party: ’பெரியாரை கதறவிட்ட தமிழர் செல்வம்!’ யார் இந்த சர் AT.பன்னீர் செல்வம்!

Kathiravan V HT Tamil
Mar 01, 2024 06:45 AM IST

”1930 மற்றும் 1931ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் நீதிக்கட்சி சார்பில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மற்றும் தனித்தொகுதி கேட்டு உரையாற்றினார்”

நீதிக்கட்சி தலைவர் சர் ஏடி பன்னீர் செல்வம்
நீதிக்கட்சி தலைவர் சர் ஏடி பன்னீர் செல்வம்

என்னுமோர் முத்துச் சோளக்

கொல்லையில் பார்ப்பானென்ற

கொடுநரி உலவும் போது,

தொல்லை நீக்கிட எழுந்த

தூயரில் பன்னீர்ச் செல்வன்

இல்லையேல் படைத் தலைவன்

இல்லை எம் தமிழ்வேந்துக்கே

இந்த கவிதை வரிகள் சர் ஏடி பன்னீர் செல்வம் மறைவெய்திய போது ஏற்பட்ட விரக்தியில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதியது.

திருவாரூர் மாவட்டம் பெரும்பண்ணையூரில் 1888ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி பிறந்த சர் ஏடி.பன்னீர் செல்வம் பார்ப்பனரல்லாதோர் உரிமைக்காக வாழ்கையை அர்பணித்த தலைவர்களின் முக்கியமானவராக கருதப்படுகிறார்.

கிறிஸ்தவ நிலக்கிழார் குடும்பம்

16ஆம் நூற்றாண்டிலேயே இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ சமயம் ஏற்றுத்தை ஏற்றுக் கொண்ட பன்னீர் செல்வத்தின் தந்தை தாமரை செல்வம் ரயில்வே எழுத்தராக இருந்ததுடன் சுமார் 200 ஏக்கர் நிலங்களை கொண்ட நிலக்கிழாராகவும் விளங்கினார்.

லண்டனில் சட்டப்படிப்பு

தனது பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரியில் இண்டர் மீடியேட் படிப்புற்கு பிறகு லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த ஏடி பன்னீர் செல்வம் 1912ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி பட்டம் பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

நீதிக்கட்சியில் இணைந்து சேவை

சமூகத்தில் வர்ணாசிரம கொள்கைக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிராமணர் ஆதிக்கத்திற்கு எதிராக பார்ப்பனரல்லாதவர்களின் உரிமைக்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட பன்னீர் செல்வம் அவ்வியக்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவரானார்.

40 பள்ளிகளே செயல்பட்டு வந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் 170 ஆக உயர்த்தியதுடன் தஞ்சாவூரில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிப்பதற்கு வசதியாக மாணவர் விடுதியை கட்டினார். திருவையாறு சமஸ்கிருத கல்லூரியில் பிராமணர்களை தவிர மற்ற மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலையை மாற்றி அனைத்து சமூக மாணவர்களும் கல்வி பயில வழி செய்தார்.

வட்டமேஜை மாநாட்டில் உரை

1930 மற்றும் 1931ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் நீதிக்கட்சி சார்பில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மற்றும் தனித்தொகுதி கேட்டு உரையாற்றினார். 1937ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்ட பன்னீர் செல்வம், ராஜாஜி கொண்டு வந்த இந்தி திணிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

’சோமசுந்தர பாரதியும், பெரியாரும் மட்டுமே இந்தியை எதிர்க்கிறார்கள்’ என்று சட்டமன்றத்தில் பேசிய ராஜாஜிக்கு “அப்படியானால் நீங்கள் ஒருவர்தான் இந்தியை ஆதரிக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

”சட்டமன்றம் மெஜாரிட்டியை பொறுத்துதானே உள்ளது இரண்டுபேர் ஆதரிப்பது பெரியதா? ஒருவர் ஆதரிப்பது பெரியதா?” என்ற அவரின் நகைச்சுவை பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

1937 தேர்தலில் நீதிக்கட்சியின் தோல்விக்கு பிறகு அக்கட்சியின் தலைவராக பெரியாரை கொண்டு வந்ததில் சர் ஏடி பன்னீர் செல்வத்திற்கு முக்கிய பங்குண்டு.

ஓமன் விமான விபத்து

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போது அமைக்கப்பட்ட போர்க்கால அமைச்சரவையில் இந்திய விவகாரஙக்ளுக்கான அமைச்சரின் செயலராக சர் ஏடி பன்னீர் செல்வம் இருந்தார்.

இந்த பதவியேற்பு நிகழ்வுக்காக இங்கிலாந்து ராணுவ அதிகாரிகளுடன் அவர் சென்ற ராணுவ விமானம் 1940 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி ஓமன் தீபகற்பத்தில் விபத்துக்குள்ளானது.

பெரியாரின் கண்ணீர்

இது பெரியாரை கடும் துக்கத்திற்குள்ளாக்கியது. ‘பெரியாரின் துயரம்’ எனும் தலைப்பில் குடிஅரசு இதழில் காலம் சென்ற பன்னீர் செல்வமே! காலம் சென்றுவிட்டாயா? நிஜமாகவா? கனவா? – தமிழர் சாந்தி பெறுவாராக! என்ற தலைப்பிட்டு அப்போது பெரியார் எழுதிய இரங்கல் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று.

அந்த இரங்கலில், ”என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை; ஒரு பொட்டு கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்று கருதினேன்.

10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; சிதறவில்லை. பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கின்றது.” என்று எழுதினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.