அண்ணா பல்கலைக்கழக கொடூரம்.. FIR -ஐ ரகசியமாக பெற்று வெளியிட்டாரா அண்ணாமலை? .. அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அண்ணா பல்கலைக்கழக கொடூரம்.. Fir -ஐ ரகசியமாக பெற்று வெளியிட்டாரா அண்ணாமலை? .. அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?

அண்ணா பல்கலைக்கழக கொடூரம்.. FIR -ஐ ரகசியமாக பெற்று வெளியிட்டாரா அண்ணாமலை? .. அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?

Karthikeyan S HT Tamil
Dec 26, 2024 03:24 PM IST

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக கொடூரம்.. FIR -ஐ ரகசியமாக பெற்று வெளியிட்டாரா அண்ணாமலை? .. அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?
அண்ணா பல்கலைக்கழக கொடூரம்.. FIR -ஐ ரகசியமாக பெற்று வெளியிட்டாரா அண்ணாமலை? .. அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?

கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன். அதனால் இந்த வழக்கை மூடிமறைக்காமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு திமுக அரசு தண்டனை வாங்கி கொடுப்பதில் உறுதியாக உள்ளது.

இது ஒன்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போன்றது அல்ல. அன்று ஒரு முக்கிய பிரமுகரின் மகனே அந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார். அதனால் ஆட்சியாளர்களே அதனை மூடி மறைக்க முயற்சி செய்தார்கள். எதிர்கட்சி நடத்திய போராட்டத்தின் எதிரொலியாகத்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஒன்றும் யோக்கியமான கட்சி அல்ல. அவர்கள் அப்போது பொள்ளாச்சி சமப்வத்தை மூடி மறைக்க பார்த்தார்கள்.

இப்பொழுதுகூட ராமேஸ்வரத்தில் அதிமுகவின் பிரமுகர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மருமகன் ராஜேஸ் கண்ணா என்பவர், பெண்கள் உடை மாற்றம் அறையில் ரகசிய கேமிரா வைத்து குற்றச்செயல் செய்துள்ளார். இதுபோன்ற தவறுகளை செய்வது அதிமுகவினர்தான். தவறு செய்பவர்களுக்கு திமுகவில் இடம்கொடுப்பது கிடையாது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் இலட்சத்துக்கு 65 என்றால், தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது. இந்த அளவிற்கு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு கட்டுக்குள் வைத்திருக்கிறது.

திராவிட மாடல் அரசில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண் உயர்கல்வியை சிதைத்து பெண்களை வீட்டிலேயே முடக்கும் முயற்சியாகதான் எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்குகின்றனர். இந்தியாவிலேயே அதிக அளவில் உயர்கல்வியில் பெண்கள் படிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குவதை சிதைக்கும் செயலலில்தான் எதிர்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பாலியல் வன்முறை சம்பவங்கள் பல பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நடைபெற்றன. காஷ்மீர் சிறுமி ஆசிபாவை வன்புணர்வு செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்களே பேரணி நடத்தினார்கள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்பட்டது. போராடிய மல்யுத்த வீராங்கனைகளை அடித்து துன்புறுத்தி ஒடுக்கியது பாஜக அரசு.

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உன்னாவ் முதல் பண்டா வழக்கு எனப் பல பாலியல் கொடுமைகளை பா.ஜ.க-வினர் அரசியல் பலத்தை கொண்டு நீதிக்குப் புறம்பாக அரங்கேற்றினார்கள். உன்னாவ் மாவட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை 2017 ஜூனில் பாலியல் வன்புணர்வு செய்தனர். பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங் ஆட்சி செய்த மணிப்பூரில் 2023-ல் பெரும் கலவரம் ஏற்பட்டது. பைனோம் கிராமத்தில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அவருடைய 3 வயது குழந்தை உட்பட 14 பேர் படுகொலை செய்த குற்றவாளிகளை பா.ஜ.க அரசு நன்நடத்தை காரணம் சொல்லி விடுதலை செய்தது. 2020-ல் உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானை இரண்டு ஆண்டுகள் சிறையில் வைத்தது உத்தரப்பிரதேச பா.ஜ.க அரசு.

அதேபோல , அதிமுக ஆட்சியில்தான் நிர்மலாதேவி எனும் பேராசிரியரே மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு தள்ள நினைத்த அவலம் நடந்தது.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாகக் காவல்நிலையங்களைத் திறந்துவருகிறார் . தமிழ்நாட்டில் மொத்தம் 241 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், 32 ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுகள், 7 புலன் விசாரணைப் பிரிவுகள், 43 குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுகள் மற்றும் 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சிறார்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்கு மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் 194 சிறார் நட்பு அறைகள் மற்றும் 1,542 குழந்தைகள் நல காவல் அலுவலர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

கேள்வி : இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் மட்டும்தான் கைது செய்யப்பட்டுள்ளாரா ? மற்றவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?

அமைச்சர் பதில் : தற்போதைய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது விசாரனையில்தான் தெரிய வரும்.

கேள்வி : கைது செய்யப்பட்டவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் பல வீடியோக்கள் இருப்பதாகத் தகவல் வருகிறது. அது தொடர்பாக விசாரிக்கப்பட்டு கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்படுமா ?

அமைச்சர் பதில் : பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள் வெளியே தெரியாதவாறு, விசாரனை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு எடுக்கும்.

கேள்வி : திமுக உடன் தொடர்புபடுத்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுமா ?

அமைச்சர் பதில் : கைது செய்யப்பட்ட நபர் திமுகவின் தொண்டர் கிடையாது. அடிப்படை உறுப்ப்பினர் கிடையாது. சிலர் கூறுவது போல மாணவர் அணியிலும் கிடையாது. திமுகவிற்கும் கைது செய்யப்பட்ட நபருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சட்ட ரீதியாக நடவடிக்கை எதும் இருந்தால் அவர்கள் மேற்கொள்வார்கள்.

கேள்வி : பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்கள், எப்.ஐ.ஆரில் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே ?

பதில் : அண்ணாமலை வேண்டுமானால் ரகசியாக கொண்டு வந்து காண்பித்து இருக்கலாம். ஆனால் அரசு தரப்பில், பாதிக்கப்பட்ட மாணவியின் எந்த அடையாளமும் முதல் தகவல் அறிக்கையில் தெரியப்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை முடக்க வேண்டும் என்று எந்த வகையிலும் இந்த அரசு முயலவில்லை. அவர் மிகவும் துணிச்சலுடன் வந்து, இந்த அரசு மீது நம்பிக்கை வைத்து அவராகத்தான் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

கேள்வி : அதிமுக , பாஜக போன்ற கட்சிகள் இந்த சம்பவம் குறித்து போராட்டம் நடத்த வந்தால் காவல்துறையினர் தடுப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்களே ?

அமைச்சர் பதில் : பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தவுடன், இந்த அரசு துரிதமாக செயல்பட்டு, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விரைவில் நீதிமன்றத்தில் விசாரனை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அவர்களுக்கு எதுவும் தகவல் தெரிந்தால் அங்கு வந்து சொல்லலாம். ஆனால் இதை வைத்து அரசியல் ஆக்க பார்த்தார்கள் என்றால் அது இந்த அரசில் நடக்காது.

அமைச்சர் பதில் : இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாலியல் சீண்டல்கள் குறைவு. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் இலட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது.

கேள்வி : தனிநபர் ஒருவர் எப்படி அண்ணா பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைந்தார். பாதுகாப்பு குறைபாடு ஏதேனும் காரணமா ?

அமைச்சர் பதில் : அண்ணா பல்கலைகழக வளாகத்தில் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் உள்ளனர். அவர் அந்த பகுதியில்தான் பிரியாணி கடை வைத்திருந்ததாக கூறுகிறார்கள். அனைவரும் பயன்படுத்தும் வழி அல்லாமல், வேறு ஏதேனும் பகுதியில் இருந்துதான் அவர் வளாகத்திற்குள் வந்திருக்க கூடும். அது குறித்தும் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.