’சட்ட அமைச்சரா? திமுக பேட்டை ரவுடியா?’ அமைச்சர் ரகுபதியை விளாசும் அண்ணாமலை!
அமைச்சர் ரகுபதி அவர்களுக்கு காவல் துறையின் வேலை என்ன என்பதை சொல்லிக் கொண்டுக்க வேண்டும். வண்டலூரில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியில் காண்ஸ்டெபிள்கள் உடன் அமர்ந்து வகுப்பை கவனிக்க வேண்டும்.
’சட்டத்துறை அமைச்சரா?; திமுகவின் பேட்டை ரவுடியா?’ என அமைச்சர் ரகுபதியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுகவின் தொண்டனை விட அக்கட்சிக்கு அதிகம் வேலை செய்வது சபாநாயகர் அப்பாவுதான். சபாநாயகர் தனது இருக்கைக்கு நடுநிலையாக உள்ளாரா?, சட்டமன்றத்தை திமுக சார்பாக அவர் நடந்து கொள்கிறார் என்றார்.
கேள்வி:- துணை வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு - ஆளுநர் இடையே கருத்து முரண் நிலவுகிறதே?
உச்சநீதிமன்றம், யூஜிசி ஆகியவை வழிகாட்டுதல் படி துணை வேந்தர் நியமனத்திற்கு யூஜிசி உறுப்பினர் வேண்டும் என்பது விதி. ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உள்ள பிரச்னையால் 6 பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்கள் இல்லை. இதனால் பட்டமளிப்பு விழா பாதிக்கப்படுகின்றது. கல்வியில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்யவேதான் ஆளுநர் தலையீடு நடக்கிறது. அரசியல் செய்யும் அமைச்சரை ஆளுநர்தான் சரியான முறையில் வழிநடுத்துகிறார்.
கேள்வி:- அல் உமா இயக்கத்தை சேர்ந்த பாஷாவின் இறுதி ஊர்வலம் தொடர்பாக பாஜகவை திருமாவளவன் விமர்சித்து உள்ளாரே?
இஸ்லாம் தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் தீவிரவாதியை கொண்டாடுவது தவறு என்று சொல்கிறோம். ஆனால் பிறப்பின் அடிப்படையில் நான் விமர்சிக்கவில்லை. பாஜக சார்பில் ஜனாதிபதி, முதலமைச்சர், அமைச்சர்கள் வரை நாங்கள் சரியான மரியாதை கொடுத்து உள்ளோம். திமுகவுடன் இருக்க வேண்டும் என்பது திருமாவளவனின் கட்டாயம், கிளிப்பிள்ளையை போல் பேச வேண்டிய திருமாவின் நிலையை நினைத்து வருத்தப்படுகிறேன். திமுகவை எதிர்த்து பாஜக போராடினால் அனுமதி கிடையாது. ஆனால் தீவிரவாதி என்று சொல்லி ‘புதைப்படுகிறார், விதைக்கப்படுகிறார்’ என்று சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போட முடியாதா?. அண்ணாமலை மீது வழக்கு போட வேண்டும் என்றால் ஓடி வருகிறார்கள். ஆனால் கோயம்புத்தூரின் சூழலை கருத்தில் கொண்டு 144 தடை சட்டம் போட முடியாதா?;
கேள்வி:- 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?
முதலமைச்சரை நாற்காலியில் இருந்து விரட்டுவதற்கு தமிழக மக்கள் எல்லா வேலைகளையும் தொடங்கிவிட்டனர். 200 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி டெபாசிட் இழப்பார்கள்.
கேள்வி:- குற்றம் நடப்பதை தடுக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி உள்ளாரே?
அமைச்சர் ரகுபதி அவர்களுக்கு காவல் துறையின் வேலை என்ன என்பதை சொல்லிக் கொண்டுக்க வேண்டும். வண்டலூரில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியில் காண்ஸ்டெபிள்கள் உடன் அமர்ந்து வகுப்பை கவனிக்க வேண்டும். அவர் சட்டத்துறை அமைச்சரா அல்லது திமுகவின் பேட்டை ரவுடியா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.
கேள்வி:- ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக வழக்கு போட உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளாரே?
மோடிக்கு எதிரான காழ்புணர்ச்சி, நாட்டுக்கு எதிரான காழ்புணர்ச்சியாக மாற வேண்டாம் என்பதுதான் எனது வேண்டுகோள்.